இந்தியர்களின் ‘கருப்பு பண விவரங்களை’ பகிர சுவிட்சர்லாந்து ஒப்புதல்...
சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் தொடர்பான விவரங்களை தானாகவே மத்தியஅரசிடம் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தில் சுவிட்சர்லாந்து அரசு நேற்று முறைப்படி கையொப்பம் இட்டது.
இதன்படி, சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புபணம் எனச் சந்தேகிக்கப்படும் கணக்குகள், அதன் விவரங்கள் ஆகியவற்றை சுவிட்சர்லாந்து அரசு இந்திய அரசிடம் பகிர்ந்துகொள்ளும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மோடி, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணம் மீட்கப்படும் என்று அறிவித்தார்.
பிரதமராக பதவி ஏற்ற பின்பு கடந்த ஜூன் மாதம் சுவிட்சர்லாந்து சென்ற மோடி, அந்த நாட்டின் அதிபர் ஜோநாதன் சினைடர் அம்மானை ஜெனீவா நகரில் சந்தித்து பேசினார். அதையடுத்து இரு தலைவர்களும் தங்களது நாடுகளில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றி தானாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒப்பந்தம் குறித்த பூர்வாங்க பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உலக அளவிலான வழிமுறைகளுக்கு இணங்கி செயல்பட சுவிட்சர்லாந்து ஒப்புக்கொண்டது. அதேபோல், சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றிய ரகசியத்தை பாதுகாக்க இந்தியா உறுதி அளித்தது.
இதையடுத்து, சுவிட்சர்லாந்து பெடரல் கவுன்சில் நேற்று கூடியது. அந்த கூட்டத்தில் இந்தியாவுடன், கருப்புபணம் தொடர்பான வங்கிக்கணக்குகள், விவரங்களை தானாக பகிர்ந்து கொள்வது தொடர்பாக வரைவு அறிக்கைக்கு முறைப்படி ஒப்புதல் அளித்தது.
இதன்படி, ஜி20, பொருளாதார கூட்டுறவு மற்றும்மேம்பாட்டுக்கான நாடுகள், சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு ஏற்ப இந்தியர்கள் வங்கிகளில் பதுக்கியுள்ள பணம், உள்ளிட்ட விவரங்கள் மத்தியஅரசுடன் பகிரப்படும்.
இந்த ஒப்பந்தம் வரும் 2018ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு, 2019ம் ஆண்டில் இருந்து இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் பதுக்கியுள்ள விவரங்கள் இந்திய அரசிடம் பகிரப்படும்.