பல்வேறு தேசவிரோத குற்றச்செயல்களில் அடைக்கப்பட்ட இஸ்லாமிய மாணவ இயக்க அமைப்பை சேர்ந்த (சிமி) குற்றவாளிகள் , போபால் சிறையில் இருந்து தப்பினர். இதையொட்டி, சிறைத்துறை அதிகாரிகள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பல்வேறு குற்றச்செயல்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட இஸ்லாமிய மாணவ இயக்க (சிமி) குற்றவாளிகள், போபால் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் சென்னை சென்ட்ரல் ர யில் நிலைய வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளும் அடக்கம்.

இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் சிமி இயக்கத்தை சேர்ந்த 8 குற்றவாளிகள், சிறை காவலர் ஒருவரை, கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, தப்பி சென்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தப்பி சென்ற 8 குற்றவாளிகளில் 2 பேர், சென்னை சென்ட்ரல் ரயில் குண்டுவெடிப்பில் கைதான குற்றவாளிகள் ஆவர். 8 சிமி குற்றவாளிகள் தப்பி சென்றதையடுத்து, இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டது.

சிறையில் இருந்து தப்பி சென்ற சிமி தீவிரவாதிகளால், தாக்குதல் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது, அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பதால், அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியது. தப்பியோடிய தீவிரவாதிகளை பிடிக்க, போலீசார் தீவிரமாக ஈடுபட்டனப்.

இந்நிலையில், தப்பியோடிய சிமி தீவிரவாதிகள், அதே பகுதியில் உள்ள இந்த்கெடி என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார், அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள், போலீசாரை தாக்க முயன்றபோது, போலீசார் அவர்களை சுட்டுகொன்றனர். இதில் 8 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையில், சிறையில் இருந்த கைதிகள் தப்பியோடிய சம்பவத்தை தொடர்ந்து, சிறைத்துறை அதிகாரிகள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.