உ.பி.யில் பிச்சைக்காரராக திரிந்த ‘தமிழக கோடீஸ்வரர்’ ஆதார் கார்டு மூலம் நெல்லையில் உள்ள குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி நகரில் தமிழகத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர், பிச்சைக்காரராக திரிந்துள்ளார். அவரை தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் காப்பாற்றி, சிகிச்சை அளித்து நெல்லையில் உள்ள குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.
பிச்சைக்காரர்
ரேபரேலி மாவட்டம், ரால்பூர் நகரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றின் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு வயதான பிச்சைக்காரர் உணவுக்காக அலைந்து கொண்டு இருந்தார். இவரைப் பார்த்த சுவாமி பாஸ்கர் ஸ்வரூப் ஜி மகராஜ் மடத்தைச் சேர்ந்தவர்கள் அந்த பிச்சைக்காரரைப் பார்த்து, தங்கள் ஆசிரமத்துக்கு அழைத்து வந்தனர்.
ஒரு கோடி ரூபாய்
அவரின் தலைமுடியை வெட்டி, குளிக்கவைத்து உணவு அளித்தனர். அவர் கையில்வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது, அதில் அவரின் ஆதார் அடையாள அட்டையும், ரூ.ஒரு கோடியே 6 லட்சத்து 92 ஆயிரத்து 731 க்கான நிரந்தர வைப்புத் தொகைக்கான ஆவணங்களும் இருந்தன. இதைக் கண்டு ஆசிரம நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கோடீஸ்வர் இப்படி பிச்சைக்காரராக அலங்கோலத்தில் இருக்கிறாரே என வேதனை அடைந்தனர்.
நெல்லை தொழிலதிபர்
அவரிடம் இருந்த ஆதார் கார்டின் முகவரியை வைத்து ஆய்வு செய்தபோது, அந்த பிச்சைக்காரர் தமிழகத்தின் மிகப்பெரிய தொழிலதிபர் என்பதை கண்டுபிடித்தனர். அவர் பெயர் முத்தையா நாடார் என்பதும்,தமிழகத்தின்ெநல்லை நகரைத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மகளுக்கு தகவல்
இதையடுத்து, முத்தையா நாடாரின் மகள் கீதாவைத் தொடர்பு கொண்டு தங்களின் தந்தை முத்தையா இருக்கும் விவரத்தை தெரிவித்தனர். அதன்பின்ரால்பூர் புறப்பட்டு வந்த கீதா தனது தந்தை முத்தையா நாடாரை அழைத்துச் சென்றார்.
ஒப்படைப்பு
இது குறித்து ஆசிரமத்தின் தலைவர் சுவாமி பாஸ்கர் கூறுகையில், “ கடந்த 13ந்தேதிஎங்களின் பள்ளிக்கூடம் அருகே, அந்த பிச்சைக்காரர் உணவுக்காக அலைந்து கொண்டு இருந்தார். அவரைப் பிடித்து தலைமுடியை வெட்டி, துணிகள் கொடுத்து, உணவு அளித்தோம். அவரிடம் இருந்த ஆவணங்களில் அவரிடம் ரூ. ஒரு கோடிக்கு வைப்புத் தொகை இருந்தன. தமிழகத்தின் நெல்லையில் உள்ள முத்தையாநாடாரின் மகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் ஒப்படைப்பட்டார்’’ என்றார்.
போதைமருந்து
முத்தையா நாடார் மகள் கீதா கூறுகையில், “ கடந்த 6 மாதங்களுக்கு முன் ரெயிலில்சென்றபோது எனது தந்தையை தவறவிட்டோம். போலீசிடமும் புகார் அளித்துள்ளோம். அவருக்கு யாரோ சிலர் போதை மருந்துகளை கொடுத்து சுயநினைவை இழக்க வைத்து இருக்கலாம் என கருதுகிறோம்’’ என்றார்.