நீட் தேர்வு விவகாரம்: நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் அமளி...
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி, நாடாளுமன்றத்தில் அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு தமிழக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை சட்டமாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு, நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். மாநிலங்களவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களையும் எழுப்பினர்.
நீட் தேர்வு விஷயம் பரிசீலனையில் உள்ளதாக என்று அவைத்தலைவர் கூறியதை அடுத்து, அதிமுக எம்.பி.க்கள் தங்களின் இருப்பிடத்துக்கு சென்றனர்.