நாட்டுக்காக உயிரை அர்ப்பணித்த சுஷில்குமாரின் இறுதிச் சடங்கு : முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா எல்லைப் பகுதியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர், சுஷில்குமாரின் இறுதிச் சடங்கு முழு ராணுவ மரியாதையுடன், துப்பாக்கி குண்டுகள் முழங்க இன்று நடைபெற்றது. மறைந்த சுஷில்குமாரின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஹரியானா முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆர்.எஸ். புரா பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் முகாந்திரமின்றி, நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்திய ராணுவம் இதற்கு தக்க பதிலடி கொடுத்தது. இந்த துப்பாக்கிச் சண்டையில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுஷில் குமார் என்ற வீரர் பலத்த காயமடைந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவரது இறுதிச் சடங்கு, ஹரியானா மாநிலம் குருச்சேத்திராவில் முழு ராணுவ மரியாதையுடன் குண்டுகள் முழங்க நடைபெற்றது.
நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த சுஷில்குமாரின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஹரியானா முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதனிடையே, காஷ்மீர் மாநிலம் ரஜோரியில், ராணுவத்தினர் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் 21 கிலோ எடை கொண்ட 3 வெடிகுண்டுகளும், ஏ.கே. 56 துப்பாக்கியும், 97 தோட்டாக்களும், 5 கிலோ எடை கொண்ட வெடி மருந்தும் கைப்பற்றப்பட்டன.