லாபம் ஈட்டிக்கொடுத்த ஊழியர்களுக்கு “ஸ்கூட்டர் பரிசு” - சூரத் வைர வியாபாரியின் தாராள மனம்
குஜராத் மாநிலம்,சூரத்தைச் சேர்ந்த ஒரு வைரவியாபாரி, மந்தமான பொருளாதாரச் சூழலிலும் தனது நிறுவனத்துக்கு லாபம் ஈட்டிக்கொடுத்த 125 ஊழியர்களுக்கும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் பரிசு அளித்து அசத்தியுள்ளார்.
சூரத் நகரைச் சேர்ந்த வைர வியாபாரி லட்சுமிதாஸ் வகேரியா. சிறிய வைர வியாபாரியான இவர், சூரத் நகரில் வைரம் பட்டை தீட்டும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் 125 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு உலகஅளவில் நிலவிய, நாட்டில் இருந்த மந்தமான பொருளாதார சூழலுக்கும் மத்தியில் அவரின் நிறுவனம் லாபம் ஈட்டியது. இந்த லாபத்துக்கு காரணம் தொழிலாளர்களின் உழைப்புதான் என்பதை அறிந்த லட்சுமிதாஸ், அனைத்து தொழிலாளர்களுக்கும் இன்ப அதிர்ச்சிதர விரும்பினார்.
இதையடுத்து, சூரத் நகரில் நேற்று தொழிலாளர்கள் அனைவரையும் வரவழைத்து ஆண்டு கூட்டம் போட்டுள்ளார். அப்போது, தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வையும், அறிவித்து, அவர்களுக்கு இன்பத அதிர்ச்சியாக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரையும் பரிசாக அளித்துள்ளார். அனைத்து ஸ்கூட்டர்களும் தேசிய கொடியால் அலங்கரிக்கப்பட்டு பரிசளிக்கப்பட்டன.
கடந்த 2010ம் ஆண்டு சிறிய அளவில் லட்சுமிதாஸ் வைரம் பட்டை தீட்டும் நிறுவனத்தை தொடங்கினார். ஆனால், தற்போது அவரின் கடின உழைப்பு, ஊழியர்களின் உழைப்பு, ஒத்துழைப்பால், பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது.
தன்னிடம் நேரடியாக மறைமுக வேலை பெறும் ஊழியர்களின் நலனுக்காக, குடும்பத்தினரின் நலனுக்காக ஆண்டுக்கு ரூ.50 கோடி செலவுசெய்வதாக லட்சுமிதாஸ் கூறுகிறார்.
கடந்த ஆண்டு தீபாவளியின்போது, சூரத்தை சேர்ந்த வைரவியாபாரி சவ்ஜி தோலாகியா என்பவர், தனது ஊழியர்களுக்கு 1,260 கார்கள், 400 வீடுகள், நகைகள் உள்ளிட்டவற்றை பரிசாக அளித்து திக்குமுக்காடச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.