தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு ….முல்லை பெரியாறு பாதுகாப்பு பிரச்சினை….
முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரள அரசு அனுமதி மறுத்து வரும் பிரச்சனை தொடர்பான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் 3 வார கால அவகாசம் தந்துள்ளது.
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு பணியை கேரள அரசு மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது, அதே சமயம் அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி தந்துள்ளது.
இந்நிலையில், முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளைச் செய்ய சென்ற அதிகாரிகளை கேரள அரசு தடுத்து நிறுத்தி வருகிறது. அணையின் பராமரிப்பு பணிகளை தமிழக அரசு செய்வதற்கு கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
அணையின் பராமரிப்பு பணிக்கு கேரள அரசு தமிழக அரசை அனுமதிக்க மறுத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு கடந்த மே 4-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அணையின் பராமரிப்பு பணியை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி அளிக்க கேரள அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலையைிலான நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், இந்த அணை பராமரிப்பு பிரச்சனையில் தமிழக அரசு சொல்லும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அணையின் பாதுகாப்பு கருதியே சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எனவே தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்திடவேண்டும் என கேரள அரசு அதில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ,முல்லை பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பாக கேரள அரசின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு 3 வாரகால அவகாசம் கொடுத்து உத்தரவு பிறப்பித்தனர்.