"பாபர் மசூதி வழக்கை கோர்ட்டுக்கு வெளியே பார்த்துக்கொள்ளுங்கள்" - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
யோத்திப் ராமர் கோயில் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும். உணர்ச்சிரகமான, உணர்வுப்பூர்வமான இந்த பிரச்சினையை நீதிமன்றத்துக்கு வெளியே, சமரசப் பேச்சின் மூலமே தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு, டிசம்பர் 6-ந்தேதிஇடிக்கப்பட்டது. இந்த இடிப்பு வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி, உள்ளிட்ட 19 பேர் மீது கூட்டு சதி செய்ததாக சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
ஆனால், அவர்களை விடுதலை செய்து அலகாபாத் உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. சார்பில் மேல்முறையீடு மனு விசாரணை நிலுவையில் உள்ளது.
2010-ல் தீர்ப்பு
இதற்கிடையே கடந்த 2010ம் ஆண்டு ராமர் கோயில் கட்டுவது தொடர்பான சர்ச்சைக்குரிய இடம் குறித்து தீர்ப்பு அளித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், அந்த 27.7 ஏக்கர் நிலத்தை இந்துக்கள், முஸ்லிம்கள், நிர்மோகி அகாரா ஆகியோர் பிரித்துக்கொள்ள உத்தரவிட்டது.
சாமி இணைந்தார்
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று இந்து அமைப்புகள் சார்பில் ஒரு வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கிடையே கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர்கோயில் கட்டுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கையுடன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதுடன் ஏற்கனவே நடைபெற்று வரும் வழக்கின் விசாரணைகளிலும் சுப்பிரமணிய சுவாமியை ஒரு மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டது.
அவசர மனு
இந்நிலையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவது என்பது உணர்ச்சிகரமானது. இதில் விரைந்து உத்தரவிட வேண்டும் என்று கூறி ஒரு மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சாமி நேற்று தாக்கல் செய்தார்.
அந்த மனு தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதிகள் டி.ஓய். சந்திரசூத், எஸ்.கே. கவுல்ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
வாதம்
அப்போது, வாதிட்ட சுப்பிரமணிய சாமி, “ கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த விதமான முடிவும் எட்டப்படாமல் இருக்கிறது. இந்த வழக்கில் சமரசம் உருவாக்கும் வகையில், அயோத்தியில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்களிடம் பேச்சு நடத்தினேன். அவர்கள் நீதிமன்றத்தின் தலையீட்டின் மூலமே இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என்று கூறினர்.
இஸ்லாமிய நாடுகளில் பொதுமக்களின் நலனுக்காக சாலை அமைக்கும்போது, பாலம் கட்டும்போது, மசூதியை எந்த இடத்துக்கு வேண்டுமானலும் மாற்றிக்கொள்வார்கள். ஆனால், இந்து மதத்தில் கோயில் கட்டப்பட்டுவிட்டால் அதை இடமாற்ற முடியாது என வாதிட்டார்.
நீதிமன்றத்துக்கு வெளியே
இந்த வாதத்தைக் கேட்ட தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதிகள் டி.ஓய். சந்திரசூத், எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு, “ சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டும் விசயத்தில்தீர்வு காண அனைத்துக் கட்சிகளும் மீண்டும் ஒன்றாக இணைய வேண்டும் இந்த பிரச்சினையை நீதிமன்றத்துக்கு வெளியேதான் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
மத ரீதியான பிரச்சினைகளை சமரசப் பேச்சு மூலமே தீர்க்க முடியும். அயோத்தி பிரச்சினை என்பது உணர்ச்சிகரமானது. உணர்வுப்பூர்வமானது. அயோத்தி போன்ற உணர்வுப்பூர்வமான பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து, சமரசப் பேச்சு நடத்தி, பரஸ்பர முடிவை எட்டி பிரச்சினையை முடிக்க வேண்டும் என்றனர்.
நானே சமரசம் செய்கிறேன்
தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் கூறுகையில், “ இந்த பிரச்சினையில் அனைத்து தரப்பினரும் புதிய முயற்சிகள் எடுத்து ஒருமித்த முடிவு எடுக்க வேண்டும். ஒருவொருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து சென்று ஆக்கப்பூர்வ சமரசப் பேச்சு நடத்தினால் மட்டுமே தீர்வு காண முடியும்.
தேவைப்பட்டால், ஒரு நடுவரை அமர்த்தி இந்த பிரச்சினைக்கு பேச்சு மூலம் தீர்வு காணலாம். நடுவராக நான் கூட இருக்க தயாராக இருக்கிறேன். இல்லாவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஒரு நீதிபதியை நடுவராக இருக்க அமர்த்துகிறேன். அனைத்து தரப்பினரும் கேட்டுக்கொண்டால், ஒரு முதன்மை நடுவரையும் நாங்கள் அமர்த்துகிறோம்'' என்று தெரிவித்தார்
31-ந்தேதி
மேலும், அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசித்து, வரும் 31-ந்தேதி சுப்பிரமணியசாமி பதில் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிபதிகள் உத்தரவிட்டனர்.