பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரிக்க நிபுணர் குழு அமைத்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!
மத்திய அரசு ஒவ்வொரு முறையும் தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தைக் கூறி தப்பித்துவிட முடியாது. மத்திய அரசு தனது நிலைப்பட்டை நியாயப்படுத்தியிருக்க வேண்டும் என்று நீதிபதிகள் கண்டித்துள்ளனர்.
மத்திய அரசு ஒவ்வொரு முறையும் தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தைக் கூறி தப்பித்துவிட முடியாது. மத்திய அரசு தனது நிலைப்பட்டை நியாயப்படுத்தியிருக்க வேண்டும் என்று நீதிபதிகள் கண்டித்துள்ளனர்.
இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்திய பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தின் பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் ஆணையர்கள், நீதிபதிகள், எதிர்க்கட்சி தலைவர்கள் என பலரும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக பட்டியல் வெளியானது. இந்த பட்டியலில் பத்திரிகையாளர்கள் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்துவந்த நிலையில், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணையின் போதும் மத்திய அரசு குற்றச்சாட்டுகளை மறுத்துவந்தது. அதேவேளையில் இதுதொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு அதனை செய்யவில்லை. மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா என்ற விளக்கத்தையும் அளிக்கவில்லை.
இந்தநிலையில், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒய்வு பெற்ற நீதிபதி ஆர்.வீ.ரவீந்திரன் தலைமையில் 3 பேர் அடங்கிய நிபுணர் குழு, உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து விசாரணை நடத்தும் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இணைய பாதுகாப்பு நிபுணர்கள், சைபர் செக்யூரிட்டி நிபுணர்களும் குழுவில் இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தமது கடும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. ஒவ்வொரு முறையும் தேசிய பாதுகாப்பு என்று கூறி தப்பிக்க முடியாது. அப்படி நியாயயப்படுத்த முயன்றால் அதனை நீதிமன்றம் வாய்மூடியாக பார்த்துக்கொண்டிருக்காது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.