மும்முறை தலாக் கூறும் விவகாரத்தை 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
புகார்-விமர்சனம்
முஸ்லிம்களிடையே விவாகரத்து பெறுவதற்காக மூன்று முறை தலாக் கூறும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதில் பெண்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதேபோன்று மறுமணம், பலதார மணம் உள்ளிட்டவை குறித்தும் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அமைப்புகள் எதிர்ப்பு
இதற்கு முஸ்லிம்களின் அகில இந்திய தனியார் சட்ட வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. முஸ்லிம் சட்டங்களுக்குள் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாதென்று கூறி பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், என்.வி. ரமணா, சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரிக்கப்பட்டு வந்தது.
மத்திய அரசு
அப்போது, மத்திய அரசு இந்த விவகாரத்தின் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து மத்திய சட்ட அமைச்சகம் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், மும்முறை தலாக் கூறுவது, பலதார மணம் உள்ளிட்டவைகளை எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் நேற்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
மும்முறை தலாக் கூறி விவாகரத்தை பெறுவது என்பது மிகவும் முக்கியமான பிரச்னையாகும்.
மார்ச் 30-ந்தேதி
இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அரசமைப்பு சட்டம் குறித்த விவகாரங்கள் அதிக நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு கருத்து தெரிவித்திருக்கிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் 15 பக்களுக்கு மிகாத அளவில் தங்களது தரப்பு நியாயத்தை அடுத்த விசாரணையின்போது அளிக்க வேண்டும். மும்முறை தலாக் கூறுவது, ஹலாலான திருமணம், பலதார மணம் ஆகிய 3 விவகாரங்களை 5 பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும். இதுகுறித்து மார்ச் 30-ந்ேததி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக மும்முறை தலாக் கூறுவது, ஹலாலான திருமணம், பலதார மணம் உள்ளிட்டவை குறித்து பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர்.
