பொருளாதாரம் பற்றி மோடிக்கு ஒன்னும் தெரியாது... சுப்பிரமணியன் சுவாமியின் வஞ்சப் புகழ்ச்சி...!
பிரதமர் நரேந்திர மோடிக்கும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கும் பொருளாதாரம் பற்றி தெரியாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும் நியமன எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது:
தற்போது உலகளவில் இந்தியா பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இருந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாகப் பேசிவருகிறார். ஆனால், அது உண்மையில்லை. இந்தியாவின் பொருளதாரம் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தப்படியாக 3-வது இடத்தில் உள்ளது. ஆனால், பிரதமர் மோடி 5-வது இடத்தில் இந்தியா இருக்கிறது என்று ஏன் சொல்கிறார் என எனக்குப் புரியவில்லை. பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் தெரியாததே அதற்குக் காரணம்.
மோடிக்கு மட்டுல்ல; நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கும் பொருளாதாரம் பற்றி தெரியவில்லை. அன்னிய செலவானி மதிப்பை வைத்து மட்டும் நாட்டின் பொருளாதாரம் 5-வது இடத்தில் உள்ளதாக இருவரும் பேசுகிறார்கள். ஆனால், அந்த மதிப்பு நிலையானதல்ல. தொடர்ந்து மாறக் கூடியதே. அதை மனதில் வைத்து பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவது மிகவும் தவறு. தற்போதைய நிலையில் அந்த விகிதத்தை அடிப்படையாக வைத்து கணக்கிட்டால் இந்தியாவின் பொருளாதாரம் 7-வது இடத்தில் இருக்கிறது. 5-வது இடத்தில் அல்ல.
உண்மையில் பொதுமக்களின் வாங்கும் திறனை அடிப்படையாக வைத்தே ஒரு நாட்டின் பொருளதாரம் நிர்ணயிக்கப்பட்ட வேண்டும். அந்த வகையில் கணக்கிட்டால், இந்திய பொருளாதாரம் தற்போது உலக அளவில் 3-வது இடத்தில் உள்ளது. இவ்வாறு சுப்பிரமணியன் சாமி பேசினார்.