தமிழக மீனவர்கள் இழுவைமடி வலையை பயன்படுத்தி எல்லை தாண்டி வந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு கடல் வளத்தை அழித்து வருவதாக இலங்கை மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழக மீனவர்கள் இழுவைமடி வலையை பயன்படுத்தி எல்லை தாண்டி வந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு கடல் வளத்தை அழித்து வருவதாக இலங்கை மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம் விடப்படுகிறது என்ற இலங்கை அரசின் அறிவிப்பால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராமேசுவரம், மண்டபம், நாகப்பட்டினம் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, காரைநகர், தலைமன்னார் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் 100க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, காரைநகர், மன்னார், உள்ளிட்ட பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடப்படுவதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தமிழக மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சம்மேளன தலைவர் வரவேற்றுள்ளார். எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 105 விசைப்படகு மற்றும் நாட்டுப் பட்டுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை முகாம்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை கடற்படையினால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த படகுகளை வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி முதல் ஏலத்தில் விடப்போவதாக இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து இலங்கை யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களில் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா மற்றும் இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை வரவேற்பதாகவும் இந்த செயல் காலம் தாழ்த்தியதாக இருந்தாலும் அதனை எந்த தடை இன்றியும் ஏலம் விட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக மீனவர்கள் இழுவைமடி வலையை பயன்படுத்தி எல்லை தாண்டி வந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு கடல் வளத்தை அழித்து வருவதாக இலங்கை மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.