ஸ்ரீதேவி சிறந்த மனிதர்! நடிகை ஹேமமாலினி புகழாரம்!
ஸ்ரீதேவியின் மறைவு செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்; மிகவும் எதிர்பாராத ஒன்று என்று ஸ்ரீதேவி மறைவு குறித்து நடிகை ஹேமமாலினி கூறியுள்ளார்.
தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி. துபாயில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு ஸ்ரீதேவி (54) மரணமடைந்தார். தமிழ் மொழியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். கமல், ரஜினி, சிரஞ்சீவி மற்றும் ரிஷிகபூர் என இந்திய சினிமாவில் பல
உச்சநட்சத்திரங்களுடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர்.
தமிழில் முதன்முறையாக கே. பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்ததில் 6 பிலிம் பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருது என பல விருதுகளை அள்ளி குவித்துள்ளார். சிவாஜிகணேசன், கமல், ரஜினி போன்ற பிரபல தமிழ் நடிகர்களுடனும், முன்னணி தெலுங்கு, கன்னடம், இந்தி நடிகர்களுடனும் நடித்தவர். புகழின்
உச்சிக்கு சென்ற ஸ்ரீதேவி. இந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.
இந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவி துபாயில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது அவருக்கு அங்கே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இரவு 11.30 மணியளவில் மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை ஹேமமாலனி கூறும்போது, ஸ்ரீதேவியின் மறைவு செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். திரையுலகில் அவர் மிக முக்கியமான கலைஞர். அனைவருக்கும் அவரைப் பிடிக்கும். மிகவும் திறமைசாலி. இளம் கலைஞர்கள் அவரை பின் தொடர்ந்தனர். அவரது மரணம் இந்தி திரையுலகில் பெரிய இழப்பு; இது மிகவும் எதிர்பாராத ஒன்று. அவர் திரைப்படங்களில் 4 வயதில் இருந்தே நடித்தவர். ஸ்ரீதேவி சிறந்த மனிதர். என் துக்கத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார்.