அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று பதவியில் அமர வேண்டும் என்பதற்காக மும்பையில் டிரம்ப்புக்கும், இலங்கையில் ஹிலாரிக்கும் யாகம் நடத்தி, பிரார்த்தனை செய்யப்பட்டது.
ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அமெரிக்காவில் இன்று நடக்கிறது.
இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் (70), ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தல் உலகம் முழுவதும் பரபரப்பாக உற்று நோக்கப்படுகிறது.

உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர், துணை அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று அமெரிக்காவில் நடைபெறுகிறது. ஹிலாரி கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்துள்ளனர்.
ஹிலாரியே இப்போது முன்னணியில் இருக்கிறார் என்றாலும் யாரை அதிபர் பதவியில் அமரவைப்பது என்பது அமெரிக்க வாக்காளர்களிடமே உள்ளது. டிரம்ப்புக்கு யானை சின்னமும, ஹிலாரிக்கு கழுதை சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் யானையா? கழுதையா? எந்த சின்னத்தில் பொதுமக்கள் வாக்களிப்பார்கள் என உற்று நோக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் உற்று நோக்கும் இந்த தேர்தலை, இந்தியா சற்று அதிகமாகவே எதிர் பார்க்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இந்து சேனா அமைப்பினர் டிரம்ப் வெற்றிக்காக யாகம் நடத்தினர்.
தற்போது மும்பையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. வடக்கு மும்பையில் உள்ள விஷ்ணுதாம் கோயிலில், சுமார் 3 மணி நேரம் 2 யாகங்கள் நடந்தன.
முதலில் டிரம்ப் வெற்றி பெற வேண்டும் எனவும், பின்னர், அமெரிக்காவில் அவரே அதிபராக பதவியேற்க வேண்டும் எனவும் கோயில் நிர்வாகி ரமேஷ் ஜோஷி கூறினார். மேலும் அவர், அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் இந்த யாகத்திற்கு ஏற்பாடு செய்தாகவும் அவர் தெரிவித்தார்.
டிரம்ப் வெற்றி பெற்றால், இந்தியாவுக்கு அதிகளவில் பல நல்ல விஷயங்கள் நடக்கும் என்றும், இந்தியாவை அச்சுறுத்தும் தீவிரவாதத்தை தடுத்து நிறுத்தி, எதிராக போர் தொடுப்பார் என்றும் அந்த அமெரிக்க வாழ் இந்தியர் கூறியதாக, யாகம் நடத்தியவர்கள் கூறினர்.
இதேபோல், அமெரிக்க அதிபராக ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற வேண்டும் என இலங்கை தமிழர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். கதிர்காமம் ஆலயத்தில் 1008 தேங்காய் உடைத்த இலங்கை தமிழர்கள், தேவலாயங்களில் 1008 மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு நடத்தினர். அமெரிக்காவை ஆளப்போவது யார் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.
