ஆண்கள் சிறப்பு பூஜை...ஏழு ஜென்மத்திற்கும் மனைவிகள் வேண்டாம்
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் வாலுஜ் நகரில் உள்ள வத் பூர்ணிமா தினமான நேற்று மனைவியிடம் இருந்து விடுதலை கோரி ஆண்கள் சிறப்பு பூஜை நடத்திய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மனைவிகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிலர், மரத்தை எதிர்திசையில் சுற்றி வந்து ஏழு ஜென்மத்திற்கும் அவர்கள் மீண்டும் மனைவியாக வரக்கூடாது என வேண்டிக்கொண்டனர்.
வட மாநிலங்களில் வத் பூர்ணிமா விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில் கணவன் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என வேண்டி பெண்கள் சிறப்பு பூஜை மற்றும் விரதமிருப்பார்கள். இப்போது கணவனாக இருப்பவர்களே 7 பிறவிகளிலும் தனக்கு கணவராக கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வார்கள். கோயிலுக்கு சென்று மரத்தை சுற்றி வந்து கயிறு கட்டுவார்கள்.
எமனுடன் போராடி சாவித்திரி தனது கணவர் சத்தியவானை மீட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாள்தான் வத் பூர்ணிமா தினம் என கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த தினத்தில் சில ஆண்கள் மனைவியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மரத்தை எதிர்திசையில் சுற்று வந்தனர். ஏழு ஜென்மத்திற்கும் அவர்களே மனைவியாக வந்துவிடக்கூடாது என கோஷம் போட்டபடி வந்தனர்.