300 பாம்புகளை அசால்ட்டாக தட்டி தூக்கியவர்.. அலட்சியத்தால் நேர்ந்த பரிதாபம்..
கர்நாடக மாநிலத்தில் பாம்பு பிடிப்பவர் ஒருவர், குடிபோதையில் அலட்சியமாக பாம்பை பிடித்ததால், அந்த பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுப்பட்டு வரும் அந்த நபர், இதுவரை 300 க்கும் மேற்பட்ட விஷ பாம்புகளை லாவகமாக பிடித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ள கொடிஹாலா கிராமத்தில் பசவராஜ் பூஜாரி என்பவர் பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கொடிஹாலா மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் எங்கு பாம்பு பிடிக்க வேண்டுமென்றாலும், இவரை தான் அழைப்பார்களாம். அந்த அளவிற்கு பாம்பு பிடிக்கும் தொழிலில் கைதேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முந்தினம், கொடிஹாலா கிராமத்திலுள்ள ஒருவரின் வீட்டிற்குள் சுமார் 5 அரை அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனையடுத்து அக்கிராமமக்கள், விஷபாம்பினை பிடிப்பதற்கு, பாம்புபிடி பசவராஜை அழைத்துள்ளனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. நிதானமின்றி இருந்த பசவராஜ், பாம்பு பிடிக்க மறுப்பு தெரிவிக்காமல், அந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த ஐந்தரை அடி நீளமுள்ள விஷப்பாம்பை லாவகமாக பிடித்துள்ளார். ஆனால் பாம்பை பிடித்தவுடன் அதனை பத்திரமாக காட்டிற்குள் விடாமல் ,பிடித்த பாம்பை, கையில் வைத்து அங்குள்ள மக்களிடம் வேடிக்கை காட்டியுள்ளார். அப்போது அந்த பாம்பு, பசவராஜை 5 முறை கடித்துள்ளது. இதனையடுத்து, பாம்பின் விஷம் அவர் உடல் முழுவதும் பரவி, இரத்தத்தில் கலந்து, சரிந்து விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும் இதற்கு காரணம் அவர் பாம்பை , மிக இறுக்கமாக பிடித்திருக்கலாம் என்றும் கையில் இருந்து விடப்பட வேண்டும் என்று எண்ணி , பல முறை கடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தனது திறமையால் , அசால்ட்டாக 300 விஷபாம்புகளை பிடித்த பசவராஜ், போதையில் தனது அலட்சியத்தால் பாம்பு கடித்தே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
பாம்பு கடித்த இடத்தில் வாய்வைத்து உறிவது, நெருப்புவைப்பது, கத்தியால் கீறிவிடுவது இவை எல்லாமே தவறான முதலுதவிகள். பாம்பு கடித்த இடத்தில் மஞ்சள் போன்ற பொருள்களைப் பூசக் கூடாது. பாம்புக்கடிக்கு ஆளானவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவரை நடக்கவைத்து அழைத்து செல்லக் கூடாது. படுக்க வைத்தோ, உட்கார வைத்தோ அழைத்துச் செல்ல வேண்டும். கடித்தது விஷப்பாம்புதானா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும். பாம்பு கடித்த இடத்தில், இரண்டு பற்களின் அடையாளம் மட்டும் சற்று இடைவெளியில் பதிந்திருக்கும்; அந்த இடம் சற்று வீங்கி கடுமையான வலி ஏற்பட்டிருக்கும். இந்த அறிகுறி இருந்தால், அது விஷப்பாம்புக் கடியாகத்தான் இருக்கும். கடித்த இடத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பற்கள் வரிசையாகப் பதிந்து காணப்பட்டால், அந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல. மேலும் கடித்த பகுதியிலிருந்து, சற்று உயரத்தில், கைக்குட்டை, துணி, கயிறு போன்ற ஏதாவது ஒன்றைக் கட்ட வேண்டும். இறுக்கமாகக் கட்டாமல், இரண்டு விரல் நுழையும் அளவுக்கு இடைவெளி கொடுத்துக் கட்டலாம்