‘‘விஷப் பற்களை வெளிக்காட்டும் நல்ல பாம்பு’’ என, பா.ஜனதா மீது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்குதல் தொடுத்தார்.
மோதல் முற்றுகிறது
பா.ஜனதாவுடன் நீண்ட கால கூட்டணி கட்சியான சிவசேனா, தற்போது அந்த கட்சியுடன் உறவை துண்டித்துக் கொண்டுவிட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் முடிவுக்கு வரும் நிலையில் அந்த இரு கட்சிகளுக்கு இடையேயான மோதல் தீவிரம் அடைந்து வருகிறது.
உத்தவ் தாக்கரே
வருகிற 21-ந்தேதி நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மும்பையை அடுத்த தானேயில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
நசுக்க வேண்டிய நல்ல பாம்பு
அப்போது அவர் கூறியதாவது-
‘‘நாங்கள் கடந்த 25 ஆண்டுகளாக ஒரு ‘நல்ல பாம்பு’டன் கூட்டணி வைத்து இருந்திருக்கிறோம். அந்த பாம்பு தனது விஷப் பற்களை ஆக்ரோஷமாக வெளிக்காட்டுகிறது. அதை எப்படி நசுக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்.
அதே தவறை (பா.ஜனதாவுடன் கூட்டணி) மீண்டும் செய்ய சிவசேனா விரும்பவில்லை. பா.ஜனதா விவகாரத்தில் இனி மிகவும் எச்சரிக்கையுடன் இருப்போம்’’.
இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.
போலி வாக்குறுதி
மும்பை மாநகராட்சி தேர்தல் தொகுதி பங்கீட்டின்போது நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடியும், மகாராஷ்டிரா முதல்-அமைச்சர் பட்நாவிசும் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை அளித்து வருவதாகவும் தாக்கரே தாக்குதல் தொடுத்தார்.
ஏற்கனவே நடைபெற்ற முதல் கட்ட பிரசாரத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, மும்பை மாநாகராட்சி தேர்தலில் தங்கள் கட்சிக்குப் பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டாலும், பா.ஜனதாவுடன் உடன்பாடு செய்து கொள்ள மாட்டோம் என அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
