"பாஜகவின் தந்திரம் கர்நாடகாவில் பலிக்காது" - சித்தராமையா கண்டனம்!!
மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு, ஒவ்வொரு மாநிலமாக தன் வசம் செய்து வருகிறது. இதையொட்டி தென் இந்தியாவான தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு மவுசு இல்லாவிட்டாலும், அங்கு ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது.
ஏற்கனவே தமிழகத்தில், ஆட்சி அமைப்போம் கூறும் பாஜகவுக்கு, காலூன்றவே வழியில்லை. இங்கு ஆட்சி எப்படி அமைக்க முடியும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதேபோல் தமிழகத்தில் தாமரை மலரும் என கூறியதற்கு, அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தமிழகத்தில் தண்ணீரே இல்லை. பின்பு எப்படி தாமரை மலரும் என நக்கலடித்து பேசினார்.
இந்நிலையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மீது பாஜக அரசு, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைகள் மூலம் சோதனைகள் நடத்துவதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பாஜக தலைவர்கள் அமித்ஷா, மோடி என யார் வந்தாலும் கர்நாடகாவில் அவர்களால், கால் பதிக்க முடியாது. 40 ஆண்டுகளாக இங்கு காங்கிரஸ் கட்சியும் அரசியலில் ஈடுபட்டு வருகிறது.
உத்தரபிரதேசம் போல் இங்கு எந்த தந்திரத்தையும் பாஜக செய்ய முடியாது.கோவா, பஞ்சாப், மணிப்பூரில் செய்த தந்திரம் தோல்வியை கொடுத்தை ஆர்வர்கள் மறந்துவிட்டார்கள். அதே போன்று தான் கர்நாடகாவில் இவர்களின் தந்திரம் பலிக்காது.
கர்நாடகாவில் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டமில்லை. எடியூரப்பா தலைமையிலான பாஜக 150 இடங்களில் வெற்றி பெறும் என அமித்ஷா கூறுவது கேட்பதற்கு மட்டும் சந்தோஷமாக இருக்கும். நடவடிக்கையில் எடுப்படாது என்றார்.