பிரதமர் மோடி இந்தியாவை மேலும் வளர்ச்சியடைய செய்வார்! மோடியின் வங்கதேச வருகைக்கு நன்றி தெரிவித்த ஷகிப் அல் ஹசன்
பிரதமர் மோடியின் வங்கதேச வருகை, இருநாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் என்றும், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா மென்மேலும் வளர்ச்சியடையும் என்று வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 15 மாதங்களுக்கு பிறகு முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார். இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தின் 50வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர் டாக்காவில் சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.
இன்று மாலை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் இணைந்து பங்கபந்து-பாபு அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் வங்கதேச வருகைக்கு நன்றி தெரிவித்து வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் மிகச்சிறந்த ஆல்ரவுண்டருமான ஷகிப் அல் ஹசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், இந்திய பிரதமர் மோடியை சந்திப்பதை பெருமையாக கருதுகிறேன். மோடியின் வங்கதேச வருகை இருநாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும். மோடி மிகச்சிறந்த தலைவர். பிரதமர் மோடி இந்தியாவை மென்மேலும் வளர்ச்சியடைய செய்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியா - வங்கதேச உறவு நாளுக்கு நாள் வலுப்பட்டுக்கொண்டே வருகிறது. இருநாடுகளுக்கு இடையே நிறைய திட்டங்கள் கையெழுத்தாகின்றன என்று குறிப்பிட்ட ஷகிப் அல் ஹசன், பிரதமர் மோடியின் வங்கதேச வருகைக்கு நன்றியும் தெரிவித்தார்.