Service tax for hotel and restaurant
ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்களில் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் ‘சர்வீஸ்சார்ஜ்’ கட்டணத்துக்கும் வரி விதிக்கப்படும் எனத் தெரிகிறது. இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
ஓட்டக்கு வந்து சாப்பிடும் வாடிக்கையாளர்களிடம் கண்டிப்பாக சர்வீஸ்சார்ஜ் கட்டணம் வசூலிக்க கூடாது என்று அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பெற வேண்டும் என்று மத்திய நுகர்வோர்கள் துறை அமைச்சகம் முன்பு உத்தரவிட்டு இருந்தது. ஆனால், அந்த உத்தரவை மதிக்காமல் பல ஓட்டல்கள் சர்வீஸ்சார்ஜ் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தது. இதையடுத்து, இந்த பரிந்துரையை நுகர்வோர் அமைச்சகம் செய்துள்ளது.
இது குறித்து மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் டுவிட்டரில் கூறுகையில், “ ஓட்டல்களில் கட்டாயமாக சர்வீஸ்சார்ஜ் வசூலிக்கப்படும் விஷயம் தீவிரமாக இருப்பதை உணர்ந்து, அந்த சர்வீஸ் சார்ஜுக்கு வரி விதிக்க வேண்டும் என்று மத்திய நேரடிவரிகள் வாரியத்துக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன். சர்வீஸ் சார்ஜ் வலுக்கட்டாயமாக செலுத்திய நுகர்வோர்கள் தேசிய நுகர்வோர் உதவி எண்கள் மூலம் உதவி பெறலாம்’’ என்றார்.
இது குறித்து மத்திய நுகர்வோர் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், “ ஏராளமான ரெஸ்டாரன்ட்கள், ஓட்டல்கள் வாடிக்கையாளர்களிடம் 10 சதவீதம் சர்வீஸ்சார்ஜ் கட்டாயமாக வசூலிக்கிறார்கள் என்று தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதுமட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் சாப்பிடும் முன்பே, சர்வீஸ் சார்ஜ் செலுத்த வேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால், ஏற்கனவே மத்திய நுகர்வோர் அமைச்சகம் தெளிவுபடுத்தியபடி, சர்வீஸ்சார்ஜ் கட்டணத்தை கட்டாயமாக நுகர்வோர்களிடம் இருந்து பெறக்கூடாது. இது விருப்பத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். வற்புறுத்தி சர்வீஸ்சார்ஜ் பெறுவது நியாயமில்லாத வர்த்தகமாகும்.
மேலும், வசூலிக்கப்படும் இந்த சர்வீஸ்சார்ஜ் கட்டணம் அனைத்தும் ஓட்டலில் பணியாற்றும் பணியாளர்களுக்குதான் பிரித்துக்கொடுக்கப்படுகிறது என்று ஓட்டல்கள் நிர்வாகம் சார்பில் நிரூபிக்க முடியுமா?. அவ்வாறு நிரூபிக்காவிட்டால், வசூலிக்கப்பட்ட அந்த சர்வீஸ் சார்ஜ் வருமானமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்கும் வரி விதிக்கப்படும். இந்த சர்வீஸ்சார்ஜ் கட்டணம் அனைத்தும் உண்மையில் கணக்கில் கொண்டுவரப்படுகிறதா என்பது யாருக்கு தெரியும்?’’ எனத் தெரிவிக்கின்றன.
