குழந்தைகளுக்குள் அடிதடி: மாண்ட்டெசரி பள்ளியில் அதிர்ச்சி - வைரல் வீடியோ!
பெங்களூருவில் உள்ள மாண்ட்டெசரி பள்ளியில் ஒரு குழந்தையை மற்றொரு குழந்தை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஒரு நாட்டின் முன்னேற்றத்தை நிர்ணயிப்பதில் வகுப்பறை முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, குழந்தைகளின் ஆரம்ப கால பருவங்களைப் பற்றி கல்வியாளர்கள் அதிக அக்கறை கொண்டு கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், விளையாட்டுப் பள்ளிகள் அல்லது முன்பள்ளி என்றழைக்கப்படும் Pre-school குழந்தைகளின் வாழ்வில் முக்கியப் பங்காற்றுகின்றன.
இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளின் வாழ்க்கையில் முன்பள்ளி தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக உள்ளது. இந்த பள்ளிகள் குழந்தைகளை பெரிய பள்ளிகளுக்குச் செல்வதற்குரிய தன்னம்பிக்கை மற்றும் தனித்தன்மையை வளர்த்து அவர்களைத் தயார்படுத்துகிறது. அவர்களின் அடிப்படை செயல்கள் உருவாக உதவுகிறது.
முன்பள்ளி முறையான கல்வி பயிலும் ஒரு இடமல்ல என்றாலும், இந்த பள்ளிகளில் அடிப்படை கற்றல்கள் விளையாட்டு முறையில் குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படுகின்றன. இத்தகைய பள்ளிகளில் ஆசிரியரின் தலைமையில் குழந்தைகள் கூடி, மகிழ்ந்து விளையாடி தங்கள் நேரத்தை ஒன்றாகக் கழிக்கிறார்கள். எனவே, இந்த பள்ளிகளில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. முதல் முதலாக, குழந்தைகள் தங்களது பெற்றோரின் அரவணைப்பை விட்டு, வெளியே செல்வதால் ஆசிரியர்களின் தீவிர கண்காணிப்பில் அவர்கள் இருப்பதும் அவசியமாகிறது.
கேரளாவில் எமர்ஜென்சி போன்ற சூழல்... ஊடகங்களை வேட்டையாடும் அரசு: பிரகாஷ் ஜவடேகர் விமர்சனம்
இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள மாண்ட்டெசரி பள்ளியில் ஒரு குழந்தையை மற்றொரு குழந்தை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிக்கலசந்திரா பகுதியில் உள்ள டெண்டர்ஃபுட் மாண்ட்டெசரி பள்ளியில், இந்த அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது. அப்பளியில் உள்ள ஒரு அறையில் ஆசிரியர்களின் கவனிப்பு இல்லாமல் குழந்தைகள் அடைக்கப்பட்டுள்ளனர். அப்போது, வயதில் சிறிது அதிகமாக இருப்பது போன்று தோற்றமளிக்கும் குழந்தை ஒன்று, குறுநடை போடும் மற்றொரு குழந்தையை தாக்கியுள்ளது. மறுபடிமறுபடியும், அந்த குழந்தையை, மற்றொரு குழந்தை குத்துகிறது, அடிக்கிறது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் கவனித்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தங்களது குழந்தைகளை முன்பள்ளிகளுக்கு பெற்றோர்கள் அனுப்பும் நிலையில், ஆசிரியர்கள் கவனிப்பாறற்று குழந்தைகள் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்பள்ளிகள் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்கள் அல்ல, அவை குழந்தைகளை முறையாக பராமரிக்க இடம் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.