பள்ளியில் திடீர் துப்பாக்கிச் சூடு... ஆசிரியை உயிரிழப்பு... ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு..!
துப்பாக்கிச் சூட்டில் தாக்கப்பட்ட ஆசிரியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு. பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்த பள்ளி ஆசிரியை ரஜினி பல்லா என கண்டறியப்பட்டு இருக்கிறது.
துப்பாக்கிச் சூட்டில் தாக்கப்பட்ட ஆசிரியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலன் இன்றி ஆசிரியை மருத்துவமனையில் உயிரிழந்தார். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஆசிரியை ஜம்முவை அடுத்த சம்பா பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு குல்கம் பகுதியை அடுத்த கோபால்போராவில் உள்ள உயர்நிலை பள்ளியில் நடந்தது. தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்களை விரைந்து கைது செய்யப்படுவர் என ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர். துப்பாக்கிச் சூடு நடந்ததை அடுத்து அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். மேலும் இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
“ரஜினி ஜம்முவை அடுத்த சம்பா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். அரசு ஆசிரியையான இவர் தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள குல்கம் எனும் இடத்தில் பணியாற்றி வந்தார். திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் தனது உயிரை இழந்துள்ளார். உயிரிழந்த ஆசிரியையின் கணவர் ராஜ் குமார் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். வன்முறையில் மற்றும் ஓர் குடும்பம் சிதைக்கப்பட்டு உள்ளது,” என தேசிய மாநாடு கட்சியின் துணை தலைவர் ஓமர் அப்துல்லா தெரிவித்து இருக்கிறார்.