80 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசு… இன்ப அதிர்ச்சி அளித்த எஸ்.பி.ஐ. வங்கி
80 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக கடனுக்கான வட்டி விகிதத்தை 30 புள்ளிகள் வரை குறைத்து எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.
வட்டி குறைப்பு
கடனுக்கான வட்டி விகிதம் இதுவரை 8.95% இருந்த வட்டி விகிதம் இருந்த நிலையில், 30 புள்ளிகள் குறைக்கப்பட்டு 8.65% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி முறை 1-ந்தேதியில் இருந்தே நடைமுறைக்கு வரும் என எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது.
வீடு கட்ட கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து உள்ள நிலையில் இந்த வட்டிக்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதன் மூலம் பலர் தங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றிக்கொள்ள முடியும் அதே சமயம் வங்கிக்கும் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்றும் வங்கி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேசமயம், எஸ்.பி.ஐ. வங்கி கடன் வழங்கும் இறுதிநிலைச் செலவுக்கான தொகையை மாற்றவில்லை. அது தொடர்ந்து 7.95 சதவீதமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு பரிசு
இதுகுறித்து வங்கியின் சில்லறை மற்றும் இணைய வங்கி சேவைப்பிரிவுக்கான நிர்வாக இயக்குநர் பி.கே.குப்தா கூறுகையில், “ டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்த வட்டி குறைப்பு குறித்து முடிவு செய்தோம். டெபாசிட் அடிப்படையில் இந்த வட்டி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் படி கடன்கள் மீது 30 புள்ளிகள் குறைக்கப்பட்டு 8.65 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எங்களின் நேர்மையான வங்கி வாடிக்கையாளர்கள் நாங்கள் கொடுக்கும் புத்தாண்டு பரிசு இது. இதனால் 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள். அரசு விடுத்த அழைப்பின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது’’ என்று தெரிவித்து உள்ளார்.
வீடுகளுக்கான கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், வாகனங்களுக்கான கடனுக்கும் வட்டி விகிதம் விரைவில் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடுகையில் எஸ்.பி.ஐ வங்கியில் தான் கடன் வட்டி விகிதம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.