ரூ.30 லட்சத்துக்குள் வீட்டுக்கடனா?... நாளைக்கே வாங்கிடுங்க… எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி வட்டி குறைப்பு
30 லட்சத்துக்குள் வீட்டுக் கடன் பெறும் நபர்களுக்கு, வட்டியில் 0.25 புள்ளிகளை குறைத்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி இன்று அறிவித்துள்ளது.
முதல் முறையாக சொந்த வீடு வாங்க விரும்பி கடன் பெறும் நபர்களுக்கு வீட்டுக்கடனுக்கான வட்டி 8.35 சதவீதம் மட்டுமே இருக்கும். இந்த திட்டம் படி ரூ.30 லட்சத்துக்குள் கடன் பெறுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இது குறித்து எஸ்.பி.ஐ. வங்கியின் மேலான் இயக்குநர் ரஜ்னிஷ் குமார் டெல்லியில் கூறுகையில், “ முதல்முறையாக வீடுவாங்க விரும்புவோர், ரூ.30 லட்சத்துக்குள் கடன் பெற விரும்பினால், அவர்களுக்கு வட்டியில் 25 புள்ளிகள் தள்ளுபடி தரப்பட்டுள்ளது.
இந்த திட்டம் ஜூலை 31-ந்தேதி வரை மட்டுமே பொருந்தும்.
ஆண்கள் ரூ.30 லட்சத்துக்குள் கடன் பெற்றால், அவர்களுக்கு 0.20 சதவீதம் கடன்வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு 8.40 சதவீதமாக வட்டி கணக்கிடப்படும்.
வேலைக்கு செல்லும் பெண்கள் கடன் பெற்றால் அவர்களுக்கு 0.25 வட்டித்தள்ளுபடி, வேலைக்கு செல்லாத பெண்களுக்கு 20 சதவீதம் வட்டித் தள்ளுபடியும் அளிக்கப்படும். இந்த தள்ளுபடி மூலம் மாதத்துக்கு ரூ.530 வரை சேமிக்க முடியும். இந்த திட்டம் செவ்வாய்க்கிழமை(நாளை) முதல் நடைமுறைக்கு வருகிறது.
பிரதமர் மோடி அறிவித்த 2022ம்ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில், குறைந்தவிலையில் வீடு வாங்க விரும்புவோர்களுக்கு இந்த கடன் திட்டம் பொருந்தும்” எனத் தெரிவித்தார்.