வதந்திய பரப்பாதீங்க…ஏடிஎம்ல இருந்த பணம் எடுக்க 25 ரூபாய் சேவைக் கட்டணம் என்பது தவறான தகவல்…எஸ்பிஐ மறுப்பு…
எஸ்பிஐ ஏடிஎம்களில் இருந்து ஒவ்வொரு முறையும் பணம் எடுக்க 25 ரூபாய் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று வெளியான தகவல் தவறானது அவ்வங்கி அறிவித்துள்ளது.
பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, பெருநகரங்களில் இருப்பவர்கள் தங்களது வங்கிக் கணக்கில் குறைந்த பட்சம் 5,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்து வாடிக்கையாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது.
இந்த அதிர்ச்சி குறைவதற்குள், ஜூன் மாதம் முதல் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்க ஒவ்வொரு முறையும் 25 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்புகள் வெளியானது.
மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பிற ஏடிஎம்-ல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பாரத ஸ்டேட் வங்கியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில் ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்க 25 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று வெளியான செய்திகள் தவறானது என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.
25 ரூபாய் சேவைக் கட்டணம் என்பது மொபைல் வாலட்டுக்கு மட்டும் தான் என்றும் எஸ்பிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏடிஎம் கட்டணங்கள் ரிசர்வ் வங்கியால் நிர்ணயம் செய்யப்படுவதால் அனைத்து வங்கிகளுக்கு பொதுவான விதிமுறையாகும் என தெரிவித்த அதிகாரிகள் தற்போது மாதத்திற்கு 3 முறை கட்டணமில்லாமல் மற்ற வங்கி ஏடிஎம்-களை பயன்படுத்தலாம் என்றும் சொந்த ஏடிஎம்-களில் 5 முறை பணம் எடுக்கலாம் என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.