முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கில் சசிகலா உள்பட 3 பேரும் இணைக்கப்பட்டனர்.
இதைதொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குன்ஹா ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் மற்ற 3 பேருக்கு தலா ரூ.10 கோடி அபராதமாக விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, மனுதாரர்கள் பேரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தி.மு.க. மற்றும் கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
நீதிபதீகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணை முடிந்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்யும் வகையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து நேற்று மாலை 3 பேரும், பரப்பன அக்ராஹரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையில் ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால், அபராத தொகைக்கு பதில் அவரது சொத்துக்களை முடக்கலாம் என நீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி, சொத்துக்களின் மதிப்பு பட்டியல் தயார் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த, 1990ம் ஆண்டு, முதல் முறையாக முதலமைச்சர் பதவியேற்ற ஜெயலலிதா, அப்போதைய ஆந்திரவும் தற்போதைய தெலுங்கானா மாநிலமுமான ஜிடிமெட்டில், கிராம பகுதியில் உள்ள விவசாய நிலத்தை விலைக்கு வாங்கினார்.
அந்த நிலத்துக்கு ஜெஜெ கார்டன் என பெயரிட்டார். அதே நேரத்தில், நிலம் வாங்கியபோது, அத்துடன் சேர்த்து, செகந்திராபாத்தில் உள்ள மாரேடுபள்ளி ராதிகா காலனியில், சசிகலா பெயரிலும் வீடு வாங்கப்பட்டது. இந்த வீட்டுக்கு தொடர்பான சொத்து வரி, கடந்த 2 ஆண்டுகளாக செலுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையொட்டி வரி பாக்கி மட்டும் ரூ.35 ஆயிரத்து, 424 உடனடியாக செலுத்த வேண்டும் என தெலுங்கானா அரசு சார்பில், சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வீடு, சில மாதங்களுக்கு முன் வரை வாடகைக்கு விடப்பட்டு இருந்து. தற்போது இந்த வீடு காலியாக உள்ளது என கூறப்படுகிறது.
