ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் உர்ஜித் படேலுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

அதில், புதிய கவர்னர் உர்ஜித் படேல் மாதம் ஒன்றுக்கு ரூ.2.09 லட்சம் ஊதியம் பெறுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், புதிய கவர்னர் உர்ஜித் படேலுக்கு எவ்வளவு சம்பளம், தங்குமிடம், எத்தனை கார்கள், பணியாளர்கள் உள்ளனர் என்பது குறித்து கேட்டு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மனு செய்யப்பட்டு இருந்தது.

இதற்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது. அதில், கடந்த செப்டம்பர் மாதம் புதிய கர்னராகப் பொறுப்பு ஏற்ற உர்ஜித் படேல் தற்போது வரைமும்பையில் உள்ள துணை கவர்னர்களுக்கு ஒதுக்கப்படும் தனி வீட்டில்தான் குடி இருந்து வருகிறார். இப்போது வரை உர்ஜித் படேலுக்கு உதவியாக எந்தவிதமான பணியாளர்களும் அவரின் வீட்டில் அமர்த்தப்படவில்லை. இப்போது அவருக்கு 2 கார்களும், 2 டிரைவர்களும் வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம், முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி ரிசர்வ் வங்கியின் கவர்னராகப் பொறுப்பு ஏற்றார். அப்போது அவருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1.69 லட்சம் ஊதியமும், அதன்பின், ரூ.1.78 லட்சம், ரூ.1.87 லட்சம் என 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் உயர்த்தப்பட்டது. மேலும், இந்த ஆண்டு ஜனவரியில் ரூ.2.04 லட்சத்தில் இருந்து ரூ.2.09 லட்சமாக உயர்த்தப்பட்டது.

கடந்த செப்டம்பர் 4-ந்தேதி வரை பதவியில் இருந்த ரகுராம் ராஜனுக்கு இறுதியில் 4 நாள் ஊதியமாக ரூ.27 ஆயிரத்து 933 கொடுக்கப்பட்டது.

ரகுராம் ராஜனுக்கு மும்பையில் தனியாக ஒரு வீடும், அவருக்கு 3 கார்களும், 4 டிரைவர்களும் ஒதுக்கப்பட்டனர். அவருக்கு உதவியாளர் ஒருவர், வீட்டு பணிகளை மேற்கொள்ள 9 பேர் வழங்கப்பட்டு இருந்தனர். இவ்வாறு ரிசர்வ் வங்கி பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.