சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் ‘அனுமதி’ !
பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.தற்போது அந்த தடையை நீக்கியுள்ளது நிர்வாகம்.
ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் முதல் 5 நாட்களும், கார்த்திகை மாதத்தின் தொடக்கம் முதலும் பக்தர்கள் தரிசனத்துக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்படுவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் விரதம் தொடங்கி சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபடுவது பக்தர்களது வழக்கம். கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களிலிருந்து மாலை அணிந்து வரும் பக்தர்கள் இந்த பூஜையில் கலந்துகொள்வர்.
கார்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து சபரிமலை அய்யப்பன் கோவிலில் மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதற்கிடையில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தனம் திட்டா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதனையடுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் திறப்பால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் சூழல் எழுந்துள்ளது. மேலும், பம்பை அணையிலும் தண்ணீர் முழுக்கொள்ளளவை நெருங்கி வருகிறது. அந்த அணையும் திறக்கப்படும் என பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், நண்பகலுக்குள் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.கனமழை காரணமாக பம்பை பகுதியில் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தடை இன்று விதிக்கப்பட்டது. ஆற்றில் தண்ணீர் குறையும் போது முன் பதிவின் அடிப்படையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்தது.இந்நிலையில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சீரானதால், தற்போது பக்தர்களுக்கு அனுமதியை வழங்கி இருக்கிறது மாவட்ட நிர்வாகம்.