ரஷ்யாவின் சோச்சி பகுதியில் இருந்து, 91 பயணிகளுடன் புறப்பட்ட Tu-154 ரக விமானம் கடலில் விழுந்தது. 

ரஷ்யாவின் சோச்சி நகரில் இருந்து இன்று அந்நாட்டு நேரப்படி அதிகாலை 5.20 மணிக்கு TU 154 ரக ராணுவ விமானம் சிரியாவின் லடாக்யா நகர் நோக்கி புறப்பட்டது.

புறப்பட்ட 20 நிமிடங்களில் அந்த விமானத்தின் தகவல் தொடர்பை ரஷ்ய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் இழந்தது. மேலும் அருகில் உள்ள விமான நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள ரேடார்கள் மூலம் சோதனை செய்தபோது எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதனால், ராணுவ விமானம் பற்றி அறிய முடியாமல் போனது.

விமானம் மாயமான தகவலை ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் விமானம் சிரியாவுக்கு எதற்காக சென்றது, விமானத்தில் இருந்தவர்கள் யார் என்கிற தகவலை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், கருங்கடலின் மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானம் கடலில் விழுந்துள்ளதாக தெரிகிறது. அந்த விமானத்தில் ரஷ்ய ராணுவத்தை சேர்ந்த இசை கலைஞர்கள், செய்தியாளர்கள் என 91 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.