பணத் தட்டுப்பாடு பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் - அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி
பணத் தட்டுப்பாடு விரைவில் தீரும் என்று மத்திய திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் துறை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி உறுதி அளித்தார்.
கோவை கொடிசியா மைதானத்தில் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய திறன்மேம்போடு தொழில் முனைவோர் துறை அமைச்சர் ராஜீவ் பிரததாப் ரூடி கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:-
வர்த்தக, தொழில் துறை அமைச்சராக நான் ஏற்கெனவே பணியாற்றி இருக்கிறேன். கோவை மண்டலத்தில் உள்ள தொழில் துறையினரின் பிரச்சனைகளை என்னால் உணர முடிகிறது. தொழில் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட பிரச்னைகளை பிரதமரிடம் தெரிவித்து அவற்றுக்குத் உடனடி தீர்வு காண செய்வேன்.
கருப்புப் பணமும், பாகிஸ்தானால் உருவாக்கப்படும் பயங்கரவாதமும் நாட்டுக்குப் பெரும் பிரச்சனைகளாக உள்ளன. தனி நபர் வருவாயில் தென்னிந்தியாவைக் காட்டிலும் வடக்கு, கிழக்கு பகுதி மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர்.அங்கு தனிநபரின் வருவாய் நாளொன்றுக்கு சுமார் ரூ.120 வரையே உள்ளது.
இதுபோன்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டே உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்கச் செய்யப்பட்டுள்ளன. இதனால், ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாடு விரைவில் தீரும். இதன் மூலம் நீண்ட கால பலன்கள் கிடைக்கும். பிகார் போன்ற மாநிலங்களில் இருந்து வந்து கோவை உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதிக்குப் பிடித்தம் செய்வதை ஏற்க மாட்டார்கள்.
அவர்கள் தங்களது வருவாய் முழுவதையும் பெற்று, அதை தங்களது குடும்பத்துக்கு அனுப்பி வைப்பதையே பெரிதும் விரும்புவார்கள். இந்தியாவில் திறமையான தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. எனவே தான், கடைநிலை அரசு ஊழியர் வேலைக்குக் கூட ஆராய்ச்சிப் பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் ஐ.டி.ஐ. பயிற்சி முடித்தவர்களே முதுகெலும்புபோல இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு சரியான மதிப்பு வழங்கப்படுவதில்லை. அவர்களால் மேல்படிப்புக்குச் செல்ல முடிவதில்லை.
அந்த நிலையை மாற்றி இனி ஐ.டி.ஐ. பயிற்சி முடிப்பவர்களுக்கு மெட்ரிக், மேல்நிலை கல்விக்கு இணையான சான்று வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் இனி தாங்கள் விரும்பும் உயர் கல்வியைப் பெற முடியும். இதனால், அனைத்துத் துறைகளிலும் திறன் வாய்ந்த பணியாளர்கள் உருவாக்கப்படுவார்கள். நாட்டில் ஆண்டொன்றுக்கு 6 லட்சம் கார்கள் வரை விற்பனையாகின்றன. ஆனால், அத்தனை தகுதியான ஓட்டுநர்கள் உருவாக்கப்படவில்லை.
நாட்டில் உள்ள இரு பிரபல வாடகை கார் நிறுவனங்களுக்கு மட்டுமே சுமார் 2 லட்சம் ஓட்டுநர்கள் தேவைப்படுகின்றனர். எனவே தான், கோவை மாவட்டம் சூலூரில் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தின்கீழ், ஓட்டுநர் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.