rs 500 2000 will be changed 3 years once

கள்ள நோட்டுகளைத் தடுக்கும் நோக்கில், உயர் மதிப்பு கொண்ட ரூ.500, ரூ.2000 நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்களை சர்வதேச தரத்துக்கு ஏற்ப 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற இருக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ரூபாய் நோட்டு தடை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்டபின், 4 மாதங்களில் கோடிக்கணக்கில் கள்ளநோட்டுகள் பிடிபட்டுள்ளன. இதையடுத்து, இந்த முடிவை மத்திய அரசு எடுக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் கடந்த வியாழக்கிழமை, உள்துறை அமைச்சகம், நிதித்துறை அமைச்சகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள், மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷி ஆகியோர் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். அந்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்களை மாற்றுவதற்கு ஆதரவு தெரிவித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் பேசுகையில், “ பெரும்பாலான வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டின்கரன்சியின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒவ்வொரு 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாதுகாப்பு அம்சங்களை மாற்றிக்கொள்ளும். அதே முறையை இந்தியாவும் பின்பற்ற வேண்டியது அவசியம்.

இந்தியாவின் உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் நீண்டகாலமாகவே மாற்றப்படவில்லை. ரூபாய் நோட்டு தடை வரை பழைய ரூ.ஆயிரம் நோட்டில் இருந்த பாதுகாப்பு அம்சங்கள் மாற்றப்படவில்லை. பழைய ரூ.500 நோட்டு, கடந்த 1987ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அந்த நோட்டின் பாதுகாப்பு அம்சங்கள் மாற்றப்படவில்லை.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000, ரூ.500 நோட்டுகளும் ஏறக்குறைய பழைய ரூபாய் நோட்டுகளைப் போலவே இருக்கின்றன. உதாரணமாக, சமீபத்தில், மேற்குவங்காளம், வங்காளதேசம் எல்லையில் பிடிக்கப்பட்ட ரூ.2000 போலி நோட்டுகளில் இருந்த பாதுகாப்பு அம்சங்கள், புதிதாக வெளியிடப்பட்ட ரூ.2 ஆயிரம் நோட்டில் இருக்கும் 17 பாதுகாப்பு அம்சங்களில் 11 இடம் பெற்று இருந்தன. 

குறிப்பாக அசோக பில்லர், வாட்டர் மார்க், ரூ.2000 என்ற எழுத்து, கவர்னர் கையொப்பம், தேவநாகிரிஎழுத்து ஆகியவை ஒரே மாதிரி இருந்தன. ரூபாய் நோட்டு அச்சடிக்கும் தாளின் தரம் மட்டும் மாறி இருந்தது. மேலும், ‘சந்திராயன்’, ‘ஸ்வாச்பாரத்’ சின்னமும் கூட போலி ரூபாய் நோட்டில் அச்சடிக்கப்பட்டு இருந்தது.

ஆதலால், ரூ.2000, ரூ.500 நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்களை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றுவது அவசியம். இதன் மூலம் கள்ள நோட்டுகளை தடுக்கமுடியும் என்று கூறப்பட்டது. இதையடுத்து இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டு முடிவுகளை மத்திய அரசிடம் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.