முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்காக வீட்டுக்கே வருகிறது வங்கி சேவை... வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு
70வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர் உள்ளிட்டோருக்கு வீட்டுக்கே வந்து வங்கிகள் தங்கள் சேவைகளை வழங்க வேண்டும், இந்த வசதியை டிசம்பர் 31-ந்தேதிக்குள் செய்ய வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ்வங்கி உத்தரவிட்டுள்ளது.
70 வயதுக்கு ேமற்பட்ட வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வங்கிகளுக்கு பணம் செலுத்தச் சென்றாலோ அல்லது எடுக்கச் சென்றாலோ மரியாதைக்குறைவாகவும்,சேவைகள் அளிப்பதில் தாமதம் செய்வதாகவும் ரிசர்வ் வங்கிக்கு புகார் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக பார்வையற்றவர்களுக்கு வங்கிச்சேவை தேவைப்படும் பட்சத்தில் அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று வங்கிகள் சேவையை வழங்க வேண்டும். குறிப்பாக அவர்கள் பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என்றால், அதை வந்து பெற்றுச் செல்லுதல், அவர்களின் கணக்கில் இருந்து பணம் வழங்குதல், காசோலை, வரைவோலை வழங்குதல், பெற்றுச் செல்லுதல் ஆகியவற்றை அவர்களின் வீடுகளுக்கே சென்று வங்கிகள் வழங்கிட வேண்டும்.
முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் , பார்வையற்றவர்களின் சிரமம் கருதி, அவர்களுக்கு அடிப்படை சேவைகளை வங்கிகள்,பேமெண்ட் வங்கிகள், சிறு நிதிநிறுவனங்கள் வழங்க வேண்டும். இந்த வசதிகளை வங்கிகள் வரும் டிசம்பர் 31-ந்தேதிக்குள்தங்களின் கிளைகளில் செய்ய வேண்டும். மேலும்,இது தொடர்பான அறிவிப்புகளையும், விளம்பரங்களையும் மக்கள் பார்க்கும் வகையில் தெரியப்படுத்த வேண்டும். இணையதளங்களிலும் வெளியிட வேண்டும்.
மேலும், முதியோர்கள் தாங்கள் வைத்திருக்கும் ஜீவன் பிரமான் ஓய்வூதியத் திட்டத்தில் சான்றிதழைப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழை வழங்கிட வேண்டும்.
அது மட்டுமல்லாமல், சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு கட்டணமில்லாமல், 25 இதழ்கள் கொண்ட காசோலேயை வழங்க வேண்டும். மேலும் காசோலைகள் பெறுவதற்காக முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட எந்த வாடிக்கையாளரையும் நேரடியாக வரக்கூறி வங்கிகள் கட்டாயப்படுத்தக்கூடாது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.