12 கோடி ரூபாய் சிலைகள் கடத்தல்.. சென்னை டூ புதுச்சேரி.. விரைந்த தனிப்படை.. இறுதியில் நடந்தது..?
புதுச்சேரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.12 கோடி மதிப்புள்ள 600 ஆண்டுகள் பழமையான 3 உலோக சுவாமி சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மீட்டுள்ளனர்.
புதுச்சேரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.12 கோடி மதிப்புள்ள 600 ஆண்டுகள் பழமையான 3 உலோக சுவாமி சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மீட்டுள்ளனர். தமிழகத்தின் தொன்மையான கோயில்களில் இருந்து திருடப்பட்ட பழமையான சிலைகள் புதுச்சேரியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார், ஒயிட்டவுன், சப்ரெய்ன் தெருவில் உள்ள வீடு ஒன்றில் இருந்த தொன்மையான நடராஜர், வீணாதாரா சிவன் மற்றும் விஷ்ணு உலோக சிலைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் தற்போது மீட்கப்பட்டுள்ள சிலைகள் 1980 ஆம் ஆண்டுகளுக்கு முன்பாக தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளாக இருக்கக் கூடும். மீட்கப்பட்ட இந்த உலோக சிலைகள் சுமார் 600 ஆண்டுகளுக்கு மேலான தொன்மை வாய்ந்தவை என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். இதனிடயே சோழர்கள் மற்றும் விஜயநகரப் பேரரசுக்கு இடைப்பட்ட ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த சிலைகளாக இருக்கலாம் என்று கூறிய போலீசார், புதுச்சேரியில் ஜோசப் கொலம்பானி குடும்பத்தினரிடம் வசம் இருந்த இந்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சிலைகள் பிரான்ஸ் நாட்டுக்கு ஒருமுறை கடத்த முயற்சி நடந்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது இதன் மதிப்பு சுமார் ரூ.12 கோடி இருக்கும் எனவும், இந்த சிலைகள் மிகவும் தொன்மையானது என்றும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சிலைகள் எந்த கோயிலை சேர்ந்தவை என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். புதுச்சேரி சென்று தமிழக சிலைகளை மீட்டு வந்த தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார்.