Asianet News TamilAsianet News Tamil

பள்ளி மாணவர்கள் அரசியல் சாசன முகவுரையை வாசிப்பது கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு

சில சக்திகள் அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க முயற்சி செய்யும் நிலையில் இது காலத்தின் தேவை ஆகும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்

Reading preamble a must in Karnataka schools sgb
Author
First Published Sep 16, 2023, 8:53 AM IST

மாநிலத்தின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தினமும் காலையில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை உரக்க வாசித்து, அதன்படி நடப்பதை உறுதிமொழியாக ஏற்க வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

“அரசியலமைப்புச் சட்டப் பொறுப்புகளுக்குப் பின்னால் உள்ள லட்சியங்கள் மற்றும் கொள்கைகளைப் பற்றி குழந்தைகளுக்குத் தெரியப்படுத்த இந்த வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது” என்று கர்நாடக மாநில சமூகநலத்துறை அமைச்சர் சி. மகாதேவப்பா கூறியுள்ளார்.

சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு, கர்நாடக சட்டப்பேரவையில் அரசியல் சாசன முகவுரையை வாசிக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா பேசினார். "ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் அதன் முகவுரை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது" அவர் கூறினார்.

குட்பை சொன்ன எஸ்.கே.மிஸ்ரா... அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குநராக ராகுல் நவீன் நியமனம்

Reading preamble a must in Karnataka schools sgb

ஜனநாயகம் வாழ்வதற்கு அரசியலமைப்பு மிக முக்கியமானது எனவும் வலியுறுத்தினார். "அரசியலமைப்பு சட்டம் இருந்தால்தான், ஜனநாயகம் இருக்கும். ஜனநாயகம் இருந்தால்தான், நாம் அனைவரும் பிழைப்போம். எனவே, நமது அரசியலமைப்புச் சட்டத்தைப் படித்துப் புரிந்துகொண்டு பாதுகாப்பது ஒவ்வொரு தனிநபரின் கடமை" என்று அவர் கூறினார்.

"சில சக்திகள் அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க முயற்சி செய்யும் நிலையில் இது காலத்தின் தேவை ஆகும்" எனவும் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

அரசியலமைப்புக்கு எதிரான சக்திகள் நாட்டில் மனுஸ்மிருதியை அமல்படுத்த சதி செய்து வருவதாகவும், இது குறித்து விழிப்புடனும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்றும் சித்தராமையா எடுத்துரைத்தார். “அரசியலமைப்புச் சட்டத்தை அழித்து, மனுஸ்மிருதியை அமல்படுத்தினால், 90 சதவீதம் மக்கள் அடிமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை வாசிக்கும் நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 2.3 கோடி பேர் பங்கேற்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios