புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் மூன்றில் 2 பங்கு நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக இந்திய ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது

அதிக மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதேசமயம், ரூ.2000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய அல்லது மாற்ற செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி, ரூ.3.62 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பையடுத்து, புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் மூன்றில் 2 பங்கு நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக இந்திய ரிசா்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசா்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், கடந்த மாா்ச் 31ஆம் தேதி நிலவரப்படி ரூ.3.62 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் ரூ.2.41 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் (மூன்றில் 2 பங்குக்கு அதிகம்) ஒரு மாதத்துக்குள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன என்றார்.

வந்தே பாரத் ரயிலில் கேரள மாணவியின் மலையாள பாட்டை ரசித்த பிரதமர் மோடி!

திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் 85 சதவீதம் வங்கி சேமிப்புக் கணக்கில் செலுத்தியதன் மூலமாகவும், 15 சதவீத நோட்டுகள் சில்லறை மாற்றியது மூலமாகவும் வங்கிகளுக்கு வந்தடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டது, நாட்டின் நிதி நிலைத்தன்மையிலும் பொருளாதாரத்திலும் எந்தவித எதிா்மறைத் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் ரிசா்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் உறுதியளித்துள்ளார்.

ரூ.2000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய அல்லது மாற்ற செப்டம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. எனவே, பொதுமக்கள் பதற்றப்பட தேவையில்லை. அதேசமயம், கடைசி நேரத்தில் சென்று அவசராவசரமாக மாற்றுவதை தவிர்க்க வேண்டும் எனவும் சக்திகாந்த தாஸ் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.