உடனடி முத்தலாக் தடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்!
நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா பலத்த அமளிக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், முத்தலாக் மசோதாவை தாக்கல் செய்ததன் மூலம் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளதாகப் பேசினார்
உடனடி முத்தலாக் தடை மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இந்தப் புதிய மசோதாவானது, உடனடி முத்தலாக்கை கிரிமினல் குற்றமாகக் கருத வகை செய்யும். இந்த மசோதா சட்டமானால், உடனடி முத்தலாக் கொடுக்கும் இஸ்லாமிய ஆண்கள் மூன்று ஆண்டுகளுக்கு சிறை செல்ல நேரிடும். இருப்பினும், முஸ்லீம் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே உச்ச நீதிமன்ற வழிகாட்டலில், உடனடி முத்தலாக் தடை சட்டத்துக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.
முன்னதாக, முஸ்லிம்கள் மும்முறை தலாக் கூறி விவகாரத்து செய்வதை சட்ட விரோதம் என அறிவிக்க வகை செய்யும் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் இந்த மசோதா மீது பல்வேறு கட்சித் தலைவர்களும் பேசி வருகின்றனர்
இந்த மசோதா அடிப்படை உரிமைகளை பாதிக்கிறது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துப் பேசினார் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஓவைசி. அவர் பேசியபோது, சுதந்திரத்திற்கும் அரசியல் சாசனத்திற்கும் இந்த மசோதா எதிரானது. இந்த மசோதா தொடர்பாக முஸ்லிம்களுடன் அரசு ஆலோசனை நடத்தவில்லை என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசியபோது, நாங்கள் ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளோம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதா பெண்களின் உரிமைக்கானது. முஸ்லிம் பெண்களின் பாதுகாப்புக்கானது என்று குறிப்பிட்டார்.