ramayana musuem in ayodhya

அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 20 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இந்த அருங்காட்சியகத்தை அமைக்க மத்திய அரசு ரூ.154 கோடியை ஒதுக்கியும், இதற்கு முன் இருந்த அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி அரசு இடம் ஒதுக்காமல் இழுத்தடித்து வந்தது. 

இந்நிைலயில், தான் பதவி ஏற்று ஒரே நாளில் இந்த திட்டத்துக்கு இடத்தை முதல்வர் ஆதித்யநாத் ஒதுக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமர் பிறந்த இடம் எனச் சொல்லப்படும் அயோத்தியை சுற்றுலாத் தலம் ஆக்க மத்தியஅரசு முடிவு செய்தது. அதன்படி, அயோத்தியில் ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கு ரூ.154 கோடி செலவில் ராமாயண அருங்காட்சியம் அமைக்க மத்திய சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரதுறை முடிவு செய்தது.

இதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமைச்சர் மகேஷ்சர்மா இங்கு வந்து இடத்தை ஆய்வு செய்து பார்வையிட்டு சென்றார்.

ஆனால், அப்போது இருந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் , இந்த அருங்காட்சியகத்துக்கு இடம் ஒதுக்கவில்லை. மாறாக ராம்லீலா பூங்கா உருவாக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதியஜனதா கட்சி 15 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றார்.

அவர் முதல்வராக பதவிஏற்றபின் முதல்முறையாக நேற்று டெல்லி சென்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு உள்ளிட்டவர்களைசந்தித்து வாழ்த்து பெற்றார்.

 அப்போது பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருடன் நடத்திய ஆலோசனைக்கு பின், முதல்வர் ஆதித்யநாத், ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 25 ஏக்கர் நிலம் ஒதுக்கி உத்தரவிட்டார். இதற்கான அனைத்து அதிகாரப்பூர்வ நடைமுறைகளும் அடுத்த 10 நாட்களுக்குள் முடிக்கப்பட்டுவிடும் எனத் தெரிவித்தார்.