"நாட்டை அம்பேத்கர் வழியில் அழைத்துச் செல்வேன்" - ராம்நாத் கோவிந்த் உறுதி!!
ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முந்தைய ஜனாதிபதிகளின் பணியை சிறப்பாக தொடருவேன் என்றும் தனக்கு இந்த பொறுப்பை அளித்த அனைவருக்கும் நன்றி என்றும் புதிய ஜனாதிபதி ராம்நாத் தெரிவித்தார்.
இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ்.ஹெகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது.இந்த தேர்தலில் பா.ஜ.க., சார்பில் நிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் 65 சதவீத ஓட்டுகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதனையடுத்து, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஜனாதிபதி பதவியேற்பு விழா நடைபெற்றது.
முன்னதாக ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் ராஜ்காட் சென்று, மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அவர் ஜனாதிபதி மாளிகை சென்று பிரணாப் முகர்ஜியை சந்தித்தார்.
அங்கு இருவருக்கும் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் இருவரையும் ஒரே காரில் நாடடாளுமன்ற மைய மண்டபத்திற்கு குதிரைப்படை வீரர்கள் அழைத்து சென்றனர்.
இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ்.ஹெகர், ராமநாத் கோவிந்த்துக்கு குடியரசுத் தலைவராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து பிரணாப் , அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ராம்நாத் கோவிந்த் தனது நார்ளுமன்றத்தில் தனது முதல் உரையை ஆற்றினார். அப்போது பேசிய அவர், இந்த பதவியின் மூலம் அம்பேத்கரின் எண்ணங்கனை நிறைவேற்றுவேன் என கூறினார்.
முழுமையான வளர்ச்சியை அம்பேத்கர் விரும்பினார் என்றும் அவர் வழியில் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல உறுதி அளிப்பதாக கூறினார்.
ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முந்தைய ஜனாதிபதிகளின் பணியை சிறப்பாக தொடருவேன் என்றும் தனக்கு இந்த பொறுப்பை அளித்த அனைவருக்கும் நன்றி என்றும் புதிய ஜனாதிபதி ராம்நாத் தெரிவித்தார்.
இதையடுத்து ராம்நாத் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அவருக்கு அங்கு 21 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.