Ram Nath Govind The British fought and sang the Tipu Sultan
கர்நாடக மாநில சட்டசபையின் வைர விழாவில் கலந்து கொண்ட குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், ‘ ஆங்கிலேயர்கள் எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்தவர் திப்பு சுல்தான்’ என்று புகழாரம் சூட்டினார்.
கர்நாடக அரசு திப்பு சுல்தானுக்கு பிறந்த நாளை கொண்டாடக்கூடாது என்று பா.ஜனதா கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், ஜனாதிபதி புகழாரம் சூட்டியதை அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
கடந்த 2015ம் ஆண்டில் இருந்து திப்பு சுல்தான் பிறந்தநாள் விழாவை கர்நாடக அரசு கொண்டாடி வருகிறது என்கிறபோதிலும், இந்த விழாவுக்கு பா.ஜனதா, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நவம்பர் 10-ந்தேதி வரும் திப்பு சுல்தான் பிறந்தநாளை விழா அழைப்பிதழில் தன்னுடைய பெயரைச் சேர்க்க வேண்டாம் என்று கூறி மத்திய அமைச்சர் ஆனந்த் ஹெக்டே சமீபத்தில் கூறி சர்ச்சை கிளப்பினார்.
மேலும், ‘‘ இந்த வெட்கக்கேடான நிகழ்ச்சிக்கு கர்நாடக அரசு தன்னை அழைக்ககூடாது. கொலைகாரரும், ஏராளமான பெண்களை பலாத்காரம் செய்தவரான திப்பு சுல்தான் பிறந்தநாள் விழாவுக்கு வரப்போவதில்லை’’ என அவர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், கர்நாடக சட்டசபையின் 60-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்பட்டு இருந்தார். அதன்பின், கர்நாடக சட்டசபையின் இரு அவைகளின் உறுப்பினர்களைக் கூட்டி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “ சட்டசபை என்பது, ஒரு சட்டத்தை, கருத்தை விவாதிக்கும் இடமாகவும், எதிர்ப்பை தெரிவிக்கும் இடமாகவும், இறுதியில் அதை செயல்படுத்தும் இடமாகவும் இருக்க வேண்டும். நாகரீகமாக நடந்து கொள்ளும் இடமாகவும், ஜனநாயகத்தை நிலைநாட்டும் இடமாக இருக்க வேண்டும் என்றார்.
திப்பு சுல்தான் குறித்து அவர் பேசுகையில், “ ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய திப்பு சுல்தான் வீர மரணம் அடைந்துள்ளார். மைசூர் ராக்கெட் எனும் ஆயுதத்தை முதன் முதலில் பயன்படுத்தி முன்னோடி திப்பு சுல்தான். இவரின் தொழில்நுட்பத்தை பின்னர் ஐரோப்பிய நாட்டினர் பயன்படுத்தினர். ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய திப்பு சுல்தானின் மரணம் வரலாற்றில் போற்றத்தக்கது’’ எனத் தெரிவித்தார்.
பாராட்டு....
குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பேச்சுக்கு முதல்வர் சித்தராமையா வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில்கூறுகையில், “கர்நாடக சட்டசபையில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந் மிகச்சிறந்த நிர்வாகி போல் உரையாற்றினார். அவருக்கு என் வாழ்த்துக்கள்’’ என்றார்.
எதிர்ப்பு....
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பேச்சுக்கு முன்னாள் துணை முதல்வரும், பா.ஜனதாவைச் சேர்ந்த மூத்த தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ கர்நாடக அரசு திட்டமிட்டு குடியரசு தலைவரை அழைத்துவந்து இப்படி பேசவைத்துள்ளது. கர்நாடகத்தில் உள்ள முஸ்லிம் மக்களின் வாக்குகளை 2018 தேர்தலில் பெறுவதற்காக திப்பு சுல்தான் ஜெயந்தியை காங்கிரஸ் அரசுநடத்துகிறது ’’ என்று தெரிவித்தார்.
