குஜராத் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த கோர விபத்தில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாஜக எம்.யின் குடும்பத்தை சேர்ந்த 12 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் ராஜ்கோட் தொகுதி பாஜக எம்.பி மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியாவின் சகோதரி குடும்பத்தினர் 5 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த கோர விபத்திற்கு குஜராத் அரசு முழுபொறுப்பு ஏற்பதாக மாநில அமைச்சர் பிரஜேஷ் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
குஜராத் தலைநகர் காந்தி நகர் அருகே மச்சு நதி மீது 230 மீட்டர் நீளத்திற்கு இந்த தொங்கு பாலம் அமைந்துள்ளது. இது கடந்த 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது. பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் இங்கு அதிகளவில் வருவது வழக்கம்.
மேலும் படிக்க:தேசிய ஒற்றுமை தினம்: சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை
இந்நிலையில் பாலத்தில் சீரமைப்பு பணிகள் கடந்த 6 மாதங்களாக தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்று வந்த நிலையில், அக்.26 ஆம் தேதி குஜராத் புத்தாண்டு அன்று திறக்கப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தொங்கு பாலத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால் பாரம் தாங்க முடியாமல் நேற்று மாலை 6.30 மணியளவில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவர்கள் நதியில் விழுந்து தத்தளித்தனர். இந்த கோரவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 60 பேர் காணவில்லை. தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர், காவல்துறையினர், உள்ளூர் மக்கள் மீட்பு பணியின் ஈடுபட்டுள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் 20 -25 வயதுக்குட்பட்டவர். இதுவரை 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க:கேபிள் தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து.. பலி எண்ணிக்கை 132ஆக உயர்வு
இந்நிலையில் குஜராத் ராஜ்கோட் தொகுதி பாஜக எம்.பி மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியா குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் உட்பட 12 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும் அவரது சகோதரியின் குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களும் இறந்துள்ளதாக அவர் வேதனையும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விபத்து நிகழ்ந்த பகுதியில் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்வார் என்று கூறப்படுகிறது.
