முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் சாந்தன்,முருகன்,பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் 7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசின் ஆலோசனையை பெற வேண்டுமே தவிர அனுமதியை பெற வேண்டியதில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மறு சீராய்வு மனு தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் இந்த மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
