பெரிய பாண்டியன் கொலை வழக்கு.. ராஜஸ்தான் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் கைது..!
ராஜஸ்தானுக்கு கொள்ளை கூட்டத்தை பிடிக்க சென்ற தமிழக போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள மஹாலட்சுமி நகைக்கடையில் துளையிட்டு நகைகளை கொள்ளையடித்த வழக்கில், ராஜஸ்தானை சேர்ந்த கொள்ளையர்களை பிடிப்பதற்காக மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் முதல்நிலை காவலர்கள், தலைமை காவலர்கள் ஆகியோர் அடங்கிய தனிப்படை ராஜஸ்தான் விரைந்தது.
கொள்ளையடித்த கும்பலின் தலைவனான நாதுராம் மற்றும் மற்றும் மற்ற கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் நாதுராமால் பெரியபாண்டியன் சுட்டு கொல்லப்பட்டார்.
இதையடுத்து நாதுராமையும் அவரது கூட்டாளியான தினேஷ் சௌத்ரியையும் ராஜஸ்தானில் போலீசார் தேடிவந்தனர். ஜோத்பூரில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற தினேஷ் சௌத்ரி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், நாதுராமை பிடிக்க சென்ற போது தமிழக போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய நாதுராமின் முக்கியமான கூட்டாளிகள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக போலீசார் மீது தாக்குதல் நடத்திய தேஜாராம், அவரது மனைவி பித்யா, மகள்கள் இருவர் என நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் அவர்கள் தமிழகத்திற்கு அழைத்துவரப்படுவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.