கற்பழிப்பைத் தடுக்க ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு போலீசை நிறுத்த முடியுமா ? …ராஜஸ்தான் அமைச்சரின் கேள்வியால் சர்ச்சை…
கற்பழிப்பைத் தடுக்க ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு போலீசை நிறுத்த முடியுமா ? …ராஜஸ்தான் அமைச்சரின் கேள்வியால் சர்ச்சை…
பாலியல் பலாத்காரத்தை தடுப்பதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் போலீசை பாதுகாப்புக்காக நிறுத்த வேண்டுமா? என ராஜஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் காளி சரண் சரப் செய்தியாளர்களிடம் கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு ஜே.கே.லான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை, அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் காளிசரண் சரப் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவரிடம் ராஜஸ்தானில் சமீபகாலமாக பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் காளிசரண், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின்போது இதுபோன்ற பாலியல் பலாத்காரங்கள் நடந்ததே இல்லையா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அமைச்சர் வெளியிட்ட கருத்து செய்தியாளர்களையும் அங்கிருந்தவர்களையும் அதிர்ச்சி அடையச் செய்ததது.
பாலியல் பலாத்காரத்தை தடுப்பதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் போலீசை பாதுகாப்புக்காக நிறுத்த வேண்டுமா? என்ற அவரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் பொறுப்பற்ற முறையில் பேசியதன் மூலம், மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியிருக்கிறார் என்றும் மாநிலத்தின் முதலமைச்சராக ஒரு பெண் இருக்கும் நிலையில், அமைச்சரின் இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது என்றும் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.