ராஜஸ்தானில் ரூ.3,500 கோடி ஊழல்; சிபிஐ விசாரணை நடத்த பாஜக வலியுறுத்தல்
ராஜஸ்தான் மாநில தகவல் தொழில்நுட்பத் துறையில் ரூ.3,500 கோடி மதிப்பிலான ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அதில் முதல்வர் அசோக் கெலாட் உள்பட பலருக்குத் தொடர்பு இருப்பதாகவும் பாஜக கூறுகிறது.
அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு தகவல் தொழில்நுட்பத் துறையில் ரூ.3,500 கோடி ஊழல் செய்திருப்பதாக குற்றம்சாட்டி, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன் மாநில அரசு அலுவலகத்தில் 1 கிலோ தங்கம் மற்றும் ரூ.2.3 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டு வந்திருக்கிறது.
இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அந்தக் கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவரான சச்சின் பைலட் போராட்டங்கள் நடத்திவரும் நிலையில், எதிர்க்கட்சியான பாஜகவும் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திர ரத்தோர், பாஜக மாநிலத் தலைவர் சிபி ஜோஷி மற்றும் எம்பி கிரோரி லால் மீனா ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர். அப்போது மாநில அரசைக் கண்டித்து ஜூன் 7ஆம் தேதி பாஜக சார்பில் போராட்டங்கள் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவையின் முதல் இஸ்லாமிய சபாநாயகராக தேர்வானார் யு.டி. காதர்
யோஜனா பவனில் உள்ள அலமாரியில் பணமும் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் அகில் அரோரா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினர். இந்தக் கட்டிடத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் பிற அலுவலகங்கள் உள்ளன. அகில் அரோரா இதற்கு பதில் அளிக்கவில்லை. துறையின் இணை இயக்குநர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று அவர்கள் கூறினர்.
"கைது செய்யப்பட்ட அதிகாரி வேத் பிரகாஷ் யாதவ் வெறும் கைக்கூலி மட்டுமே. ஊழலுக்கு காரணமான முக்கிய நபர்கள் நழுவப் பார்க்கின்றனர். ஐடி மற்றும் உள்துறை இலாகாக்களை வைத்திருக்கும் முதல்வர், இதற்காக பதிலளிக்க வேண்டும்." என்று ஜோஷி கூறினார். கடந்த நான்கரை ஆண்டுகளில் நான்கு பெரிய ஊழல்கள் நடத்துள்ளதாக ரத்தோர் குற்றம் சாட்டினார். மேலும் அரசு நடத்தும் நிறுவனமான ராஜ்காம்ப் இன்ஃபோ சர்வீசஸ் லிமிடெட் மூலம் தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
1.35 கோடி பெண்களுக்கு ஸ்மார்ட்போன் விநியோகம், ஆளில்லா விமானங்கள் வாங்குதல் மற்றும் பிற திட்டங்களை உள்ளடக்கிய ஐடி துறைக்கு அரசாங்கம் தனது பட்ஜெட்டில் 5% ஒதுக்கியுள்ளது என்று ரத்தோர் சுட்டிக்காட்டினார். "பணம் மற்றும் தங்கத்துடன் பிடிபட்ட அதிகாரியும் கொள்முதல் குழுவில் உறுப்பினராக இருந்தார். இணை இயக்குநர் யாதவ் முதல் கூடுதல் தலைமைச் செயலாளர் அரோரா, முதல்வர் கெலாட் என சங்கிலித் தொடராக பலர் இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளனர்" என்று ரத்தோர் தெரிவித்தார்.
புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் தமிழர்களின் செங்கோல் வரலாறு!
தங்கக்கட்டிகள் யோஜனா பவனுக்கு வந்தது எப்படி என்று கேள்வி எழுப்பிய ரத்தோர், இந்த வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மாநிலங்களைவை உறுப்பினர் மீனாவும் அதனை ஆமோதித்தார். "ஏற்கனவே இரண்டு வழக்குகள் ஊழல் தடுப்புப் பிரிவில் (ஏசிபி) பதிவு செய்யப்பட்டுள்ளன" என மீனா கூறினார்.
அகில் அரோரா மற்றும் வேத் பிரகாஷ் யாதவ் தவிர, நிதி இயக்குநர் நிலேஷ் சர்மா, குல்தீப் யாதவ், ஆஷிஷ் குப்தா மற்றும் கௌஷல் சுரேஷ் குப்தா உள்ளிட்ட பல அதிகாரிகள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என மீனா குற்றம் சாட்டினார்.
தரையைத் தொட்டவுடன் மீண்டும் வானில் பறந்த இண்டிகோ விமானம்! கதி கலங்கிய பயணிகள்!