தீபாவளி, தசாரா கூட்டத்தை சமாளிக்க 4 ஆயிரம் சிறப்பு ரெயில்கள்..!
அடுத்து வர இருக்கும் பண்டிகை காலத்தில் மக்களின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் 4 ஆயிரம் சிறப்பு ரெயில்களை ரெயில்வே இயக்க இருக்கிறது என்று மத்திய ரெயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
மத்திய ரெயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
நாட்டில் அடுத்து வரும் 40 நாட்களும் ஏராளமான பண்டிகைகள் வருகின்றன. தசரா, தீபாவளி, சாத் , துர்காபூஜை என பண்டிகைகள் வரிசையாக வருகின்றன. அதனால், அக்டோபர் 15 முதல் 30-ந்தேதி வரை விடுமுறை காலத்தில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க கூடுதல் ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.
கடந்த ஆண்டு 3,800 சிறப்பு ரெயில்களை இயக்கினோம். இந்த ஆண்டு 4 ஆயிரம் ரெயில்களை இயக்க இருக்கிறோம். பண்டிகை காலத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க ரெயில்வே ஊழியர்கள் விடுமுறை எடுப்பதை தவிர்க்க உத்தரவிடுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
பிரபலமான நகரங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. மேலும், கூடுதலாக பெட்டிகளை ரெயில்களில் இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சாத் பண்டிகைக்காக கொல்கத்தா, டெல்லி, மும்பை, சூரத், வதோதரா, அகமதாபாத், கிழக்கு உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அதேசமயம், சிறிய நகரங்களுக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். பண்டிகை காலத்தில் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டம் நெரிசலான இந்த நேரத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனையை ரத்து செய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய ெரயில்நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான குடிநீர், மருத்துவசதிகள், சுகாதாரமான கழிப்பறை, கூடுதல் பாதுகாப்பு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.