பனியில் மாயமாகும் விமானங்கள்...! போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு..!
டெல்லியில் நிலவி வரும் கடுமையான பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. காலை வேலைகளில் அடர்பனிமூட்டம் நிலவுவதால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று முதலே கடும் பனிமூட்டம் நிலவிவருகிறது. அருகிலுள்ள வாகனங்களே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் அடர்த்தியாக இருக்கிறது.
இதனால் சாலைகள் சரிவரத் தெரியாததால் வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை வாகனங்களில் எரிய விட்டபடியே செல்கின்றனர்.
விமான ஓடுபாதை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 50 மீட்டர் தூரத்தில் இருக்கும் பொருள்கள்கூட தெரியாத நிலை இருக்கிறது. விமானங்கள் தரையிறங்கவும் பறக்கவும், குறைந்தது 125 மீட்டர் அளவுக்கு தெளிவாகப் பார்க்கும் நிலை இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பனிமூட்ட நிலவரத்தால் விமான சேவைகள் தாமதமாகி வருவதுடன் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 14 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 18 ரயில்களின் பயண நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளதுடன் 60 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.