நாய்கள் மீது பாஜகவுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்? நாய் பிஸ்கட் விவகாரத்தில் ராகுல் பொளேர்!
நாய் பிஸ்கட் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்
![Rahul gandhi clarifies dog biscuit controversy during bharat jodo nyay yatra smp Rahul gandhi clarifies dog biscuit controversy during bharat jodo nyay yatra smp](https://static-ai.asianetnews.com/images/01hnyz3k43xggaakxm2g8024fs/rahul-gandhi-dog-biscuit_363x203xt.jpg)
மணிப்பூர் மாநிலத்தில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். பாஜகவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நியாயம் கோரும் வகையில், ஜனவரி 14ஆம் தேதியன்று தொடங்கிய பாரத் ஜோடோ நியாய யாத்ரா நடைபயணமானது மார்ச் 20ஆம் தேதி மும்பையில் நிறைவடையவுள்ளது. இந்த யாத்திரை நடைபயணமாகவும், பேருந்திலும் மேற்கொள்ளப்படுகிறது.
மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை, தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளது. தனது முந்தைய யாத்திரையை போன்றே நடைபயணத்தின்போது, பொதுமக்களை சந்தித்து அவர்களோடு கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். குறிப்பாக, குறைகளை கேட்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் படும் கஷ்டங்களை புரிந்து கொள்ளும் பொருட்டு அவர்களது பணிகளையும் செய்து வருகிறார்.
இந்த நிலையில், நாய் சாப்பிடாத பிஸ்கட்டை காங்கிரஸ் கட்சி தொண்டருக்கு ராகுல் காந்தி வழங்கி விட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அசாம் மாநில முதல்வர் தொடங்கி பாஜகவின் அத்தனை முக்கிய தலைவர்களும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அந்த வீடியோவில், நாயுடன் கொஞ்சி விளையாடும் ராகுல் காந்தி, அதற்கு பிஸ்கட் கொடுக்க முயற்சிக்கிறார். பின்னர், அதனை மற்றொரு நபரிடம் கொடுக்கிறார். அந்த நபர் அந்த பிஸ்கட்டை கீழே வைக்கிறார். அதன்பிறகு, அந்த நபரின் கைகளை ராகுல் காந்தி பற்றிக் கொள்கிறார்.
இந்த வீடியோவை வெளியிட்டு, நாய் சாப்பிடாத பிஸ்கட்டை காங்கிரஸ் கட்சி தொண்டருக்கு ராகுல் காந்தி வழங்கி விட்டதாக பாஜகவினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ராகுல் காந்தி, நாய்கள் மீது பாஜகவுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் என தனக்கு புரியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாய் பிஸ்கட் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “யாத்திரையில் நான் நிறைய மக்களை பார்க்கிறேன். அப்படி ஒரு நபர் தனது நாயுடன் வந்திருந்தார் அந்த நாய்க்குட்டிக்கு நான் பிஸ்கட் கொடுத்த போது அது பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்த. அந்த பிஸ்கட்டை அது சாப்பிடவில்லை. அதனால் நாயின் உரிமையாளரிடம் கொடுத்து கொடுக்கச் சொன்னேன். அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் அல்ல. இதெல்லாம் இவ்வளவு விவாதம் செய்ய வேண்டிய விஷயமா? நாய்கள் மீது பாஜகவினருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் என எனக்கு புரியவில்லை.” என்றார்.
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்புக்கு பதிவு: உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்தின் அம்சங்கள் என்ன?
ராகுல் காந்தி இயல்பாகவே நாய்கள் மீது பாசம் கொண்டவர். கடந்த ஆண்டு கோவா சென்ற போது கூட, அங்கு ஜாக் ரஸ்ஸல் டெரியர் ரக நாய்க்குட்டியை வாங்கி தன்னுடன் டெல்லிக்கு கொண்டு சென்றார். அதுதவிர, தனது டெல்லி இல்லத்தில் சில நாய்களையும் அவர் வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.