பிரதமர் மோடி ஓபிசி சாதி சர்ச்சை: ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு - உண்மை என்ன?
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டையடுத்து, பிரதமர் மோடியின் சாதி தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன
![Rahul Gandhi allegation about pm modi obc caste issue this is the fact smp Rahul Gandhi allegation about pm modi obc caste issue this is the fact smp](https://static-ai.asianetnews.com/images/01hp45072gxh931cmgkmwmvr8a/ddd_363x203xt.jpg)
மணிப்பூர் மாநிலத்தில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். பாஜகவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நியாயம் கோரும் வகையில், ஜனவரி 14ஆம் தேதியன்று தொடங்கிய பாரத் ஜோடோ நியாய யாத்ரா நடைபயணமானது மார்ச் 20ஆம் தேதி மும்பையில் நிறைவடையவுள்ளது.
ராகுல் காந்தியின் யாத்திரை தற்போது ஒடிசா மாநிலத்தில் உள்ளது. பாரத் ஜோடோ நியாய யாத்திரையின்போது, அம்மாநிலத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி தனது சாதி குறித்து பொய் கூறியதாகவும், அவர் பிறப்பால் ஓபிசி அல்லாதவர் என்றும் கூறினார்.
“பிரதமர் மோடி தான் ஓபிசி என்று சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார். பிரதமர் மோடி ஓபிசி பிரிவில் பிறக்கவில்லை. பொதுப்பிரிவில் பிறந்தவர். குஜராத்தை சேர்ந்த டெலி எனும் சாதியில் பிறந்தவர் அவர். அவரது சாதியை 2000ஆம் ஆண்டில்தான் பாஜக அரசு ஓபிசி பிரிவில் சேர்த்தது. பொது ஜாதியில் பிறந்தவர் என்பதால் தன் வாழ்நாள் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை அவர் நடத்த விடமாட்டார்.” என ராகுல் காந்தி கூறினார். அதாவது அவர் குஜராத் முதல்வராக பதவியேற்ற பிறகே அவரது சாதி ஓபிசி பிரிவில் சேர்க்கப்பட்டதாக ராகுல் காந்தி கூறினார்.
அதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடியின் சாதி தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், அரசாங்க கெசட்டில் இருக்கும் தகவலை சுட்டிகாட்டி, ராகுல் காந்தி கூறியது அப்பட்டமான பொய் என பாஜகவினர் கூறி வருகின்றனர்.
அதன்படி, நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக பொறுபேற்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 27, 1999 அன்று அவரது சாதி ஓபிசி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.