ரூபாய் நோட்டு தடை ஏழைகளை அழிக்கும் ‘அக்கினி குண்டு’….ராகுல்காந்தி கடும் தாக்கு
பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடை என்பது ஏழைமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மீதும், பணப் பொருளாதாரத்தின் மீதும் வீசப்பட்ட பேரழிவு தரும் ‘அக்கினி குண்டு’ என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திகடும் குற்றச்சாட்டினார்.
இமாச்சலப் பிரதேசம், தர்மசலா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது-
தொப்பி அகற்றம்
இமாச்சலப் பிரதேசத்தின் பாரம்பரிய தொப்பியாக தோட்டகலை, வேளாண்மை, சுற்றுலா ஆகியவை விளங்கின. ஆனால், பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பால் அந்த தொப்பி அகற்றப்பட்டுவிட்டது.
சர்ஜிகல் ஸ்டிரைக்
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் சர்ஜிகல் ஸ்டிரைக்கின் போது சிறப்பாகச் செயல்பட்டு உயிரையும், ரத்தத்தையும் நாட்டுக்காக கொடுத்தார்கள். ஆனால், ஊழல் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்துகிறேன் என மோடி புதிய நாடகம் போடுகிறார்.
மோடிஜி, நீங்கள் கருப்புபணம், ஊழல்மீது நீங்கள் சர்ஜிகல் நடத்தவில்லை. ஏழைமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பணப்பொருளாதாரம் ஆகியவற்றின் மீது அக்கினி குண்டுகளை வீசி இருக்கிறார்கள்.
பிளவு
ஒருபுறம் ஒரு சதவீதம் உள்ள 50 கோடீஸ்வர குடும்பங்கள் தனிவிமானம், விண்ணை முட்டும் கட்டிடங்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். மறுபுறம், 99சதவீத நேர்மையான மக்களான விவசாயிகள், ஏழைகள், தொழிலாளர்கள் நடுத்தர மக்கள் நாட்டின் நலனுக்கான வியர்வையையும், ரத்தத்தையும் சிந்திக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களை ஏழைமக்கள், பணக்காரர்கள் என பிரித்து துண்டாட பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.
பேரழிவு அக்கினி குண்டு
2-ம் உலகப் போரின் போது, மக்களை 25 நிமிடத்தில் கொத்துக் கொத்தாக கொன்றுகுவிக்க அக்கினி குண்டுகள் பயன்படுத்தப்பட்டது. ஹிரோஷிமா அணு குண்டுவீச்சைக் காட்டிலும், டோக்கியோவில் நடந்த அக்கினி குண்டுவீச்சில் பலியானார்கள்.
அதேபோல, ஏழைமக்கள் விவசாயிகள், தொழிலாளர்கள் மீது ரூபாய் நோட்டு தடை எனும் அக்கினி குண்டுகளை மோடி வீசு இருக்கிறார். 94 சதவீத கருப்புபணம் ஒரு சதவீத மக்களிடம் இருக்கிறது. ஒரு சதவீதம் பேரை ஒழிக்க 99 சதவீத மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது ஏன் எனத் தெரியவில்லை.
எதிரானது
ரூபாய் நோட்டு அறிவிப்பு என்பது அனைத்து மக்களுக்கும் எதிரானது. நேர்மையான மக்களுக்கும் எதிரானது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக மோடி அரசு ஏழைமக்கள்மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ரூபாயின் நிறம் என்ன?
ரூபாய் நோட்டின் நிறம் நேர்மையானவர்கள் கையில் தீர்மானிக்கப்படுகிறதா?, நேர்மை அற்றவர்கள் கையில் தீர்மானிக்கப்படுகிறதா.? விஜய் மல்லையா போன்றவர்கள் கையில் ரூபாய் நோட்டு செல்லும்போதுதான் அந்த நோட்டு கருப்புபணமாக மாறுகிறது. சாமானிய மக்கள் கையில் இருக்கும் போது அதற்கு நிறமே கிடையாது.
லட்டு
பிரதமர் மோடி ஏழைமக்களுக்கு ரூ.3 விலையுள்ள லட்டுவை கொடுத்துவிட்டு, மல்லையா போன்றவர்களுக்கு ரூ.1,200 கோடி மதிப்புள்ள லட்டுகளை கொடுத்துள்ளார்.
ஒரு சதவீதம்
அனைத்து கருப்புப் பணமும் ரொக்கப்பணமாக இருப்பதில்லை. அதே சமயம், அனைத்து ரொக்கப்பணமும் கருப்புப்பணம் கிடையாது. இந்தியாவில் கருப்புபணம் என்பது 6 சதவீதம் மட்டுமே இருக்கிறது. மற்ற 94 சதவீதம் கருப்பு பண முதலைகளால் ரியல் எஸ்டேட், பெரிய கட்டிடங்கள், தங்கம், சுவிஸ் வங்கிக்கணக்கில் சேமிக்கப்பட்டுள்ளன.
தெரியும்
மோடிக்கு தெரியும் கருப்புபணம் எங்கு குவிந்து இருக்கிறது. அமெரிக்காவுக்கு மோடியுடன் பயணித்தவர்களுடன் அந்த பணம் சென்றுவிட்டது. அந்த மக்களுக்குதான் பாதுகாப்புதுறை தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைத்தன. அந்த மக்களிடம்தான் ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள நிலங்களும், கோடிக்கணக்கான மதிப்புள்ள வீடுகளும் உள்ளன
இவ்வாறு அவர் பேசினார்.
