ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து, 50 நாட்கள் நிறைவடைந்துவிட்டது. இதைதொடர்ந்து, பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் 5 கேள்விகளை கேட்டுள்ளார்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ம் தேதி அறிவித்தார். இதனால் நாட்டில் பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. பெரும்பாலான சிறு தொழில்கள் முடங்கின. பொதுமக்கள் தினமும் வங்கி மற்றும் ஏடிஎம் வாசல்களில் காத்திருக்கின்றனர்.

இந்த பண விவகாரம், 50 நாட்களில் சீராடைந்துவிடும் என பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார். ரூபாய் நோட்டு தடை விதித்து நேற்றுடன் 50 நாட்கள் நிறைவடைந்துவிட்டன. செல்லாத நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்வதற்கான காலக்கெடுவும் நேற்றுடன் முடிந்துவிட்டது.

ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன், பிரதமர் மோடிக்கு, ராகுல்காந்தி 5 கேள்விகள், 11 யோசனைகளை தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று ராகுல், மீண்டும் 5 கேள்விகளை பிரதமரிடம் கேட்டுள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கு தடை விதித்து, 50 நாளாகிவிட்ட நிலையில், பிரதமர் மோடியிடம் இருந்து இந்த 5 கேள்விகளுக்கான விடையை நாடே எதிர்பார்க்கிறது.

* நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு எவ்வளவு கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது? 
* நாட்டின் பொருளாதார இழப்பு, வேலைவாய்ப்பு இழப்பு எவ்வளவு?
* ரூபாய் நோட்டு தடையால் இறந்த மக்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதா?
* ரூபாய் நோட்டுக்கு தடை விதிப்பது குறித்து பிரதமர் மோடி யார், யாருடன் ஆலோசித்தார்? நிபுணர்கள், பொருளாதார வல்லுனர்கள், ரிசர்வ் வங்கியிடம் ஆலோசிக்காதது ஏன்? 
* நவம்பர் 8ம் தேதிக்கு முந்தைய 6 மாத காலத்தில், ரூ.25 லட்சத்துக்கு மேல் வங்கி கணக்கில் டெபாசிட் செய்தவர்கள் யார், யார்? என குறிப்பிட்டுள்ளார்.